ஆளுமை:கனகசுந்தரம்பிள்ளை, தம்பிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசுந்தரம்பிள்ளை
தந்தை தம்பிமுத்து
தாய் அம்மணி
பிறப்பு 1863.08.24
இறப்பு 1922.06
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருகோணமலையின் புகழ்பெற்ற தமிழ் அறிஞர் தி. த. கனகசுந்தரம்பிள்ளை ஆவார். யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஆறுமுகநாவலர். மட்டக்களப்புக்கு ஒரு விபுலானந்தர். திருக்கோணமலைக்கு அவர்களின் வரிசையில் தி. த. கனகசுந்தரம்பிள்ளை ஆவார். திருக்கோணமலை மண்ணில் பிறந்து தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும் அரும் பெரும் தொண்டாற்றி, இந்தியாவில் சென்னையில் தனக்கென்று ஒரு அடையாளத்தையும், வரலாற்றுள் மறையா புகழையும் உருவாக்கிய ஒருவர் இவர்.

திருக்கோணமலையில் 1863 ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் 24 ஆம் நாள் பிறந்த ஒரு ஆளுமையை இவர் ஆவார். இவரது தந்தை பெயர் தம்பிமுத்துப்பிள்ளை. தாயார் பெயர் அம்மணி. இவர் இள வயதிலேயே சிறப்பான கல்வியைப் பெற்று சிறந்து விளங்கினார். இவரது சிறுவயதில் இவருக்கு ஆசிரியராக கல்வி கற்பித்த கதிரவேற்பிள்ளை, கணேச பண்டிதர் போன்றோரின் சிறப்பான போதனா ஆற்றலினால் இவரது கல்விப் புலமை சிறத்து ஓங்கியது. தனது 14 ஆவது வயதிலேயே திருக்கோணமலையில் "இளம் தமிழ் புலவர்" எனும் பெயர் பெற்றார். இவரது உடன் பிறந்த இளைய சகோதரன் தி. த. சரவணமுத்துப்பிள்ளை "மோகனாங்கி" போன்ற தமிழ் அரிய நூல்களை இயற்றியவர் ஆவார். தமிழில் முதலாவது வரலாற்று நாவலான "மோகனாங்கி", "தத்தை விடு தூது" என்பவை மூலம் பெண் விடுதலை விடயத்தில் பாரதிக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் என கலாநிதி கைலாசபதி அவர்கள் விலாசித்து கூறியது இவரது தம்பியாரை ஆகும்.

இவர் தனது பதினெட்டாவது வயதில் 1880 ஆம் ஆண்டு இந்தியாவின் சென்னைக்குச் சென்று கல்வி கற்றார். அங்கு செங்கல்வராய நாயக்கர் பள்ளி, பச்சையப்பா உயர்கல்வி, மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தார். அனைத்து தேர்வுகளிலும் சிறப்புர தோற்றி இவரது மதிப்பை உயர்த்திக் கொண்டார். ஆங்கில மொழியிலும் தனது கல்வி புலமையை பெற்றிருந்தார். தனது பிஏ படிப்பினை பூர்த்தி செய்து இந்தியாவில் தங்கி இருந்து சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அதன் பின் சிறிது காலம் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் தமிழ் பேராசிரியராக கடமை புரிந்தார். அந்த காலத்தில் தனது அறிவையும், இலக்கிய வளத்தையும் அதிகரித்துக் கொண்டார். பண்டைக் காவியங்கள் பல பாழடைந்து கிடப்பதைக் கண்டு அவற்றை மீள் புணர்பிக்க ஆர்வம் கொண்டு தொண்டாற்ற ஆரம்பித்தார். பல புலவர்களின் ஒத்துழைப்புடன், பல நூல்களை புதுப்பித்து வெளியிட்டார். குறிப்பாக கம்பராமாயணம் பாலகண்டத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். அவ்வாறே சுண்ணாகம் அ. குமாரசுவாமி பிள்ளை அவர்களுடன் சேர்ந்து "நம்பியகப் பெருமாள்" என்ற நூலுக்கு உரை எழுதினார்.

யாழ்ப்பாணத்தில் தெள்ளிப்பளைவாசியும், நீதிபதியும் ஆகிய ஸ்ரீமான் சிதம்பரநாத முதலியார் அவர்களின் புதல்வி ஆகிய "சுந்தரம்" எனும் பெண்மணியை விவாகம் செய்து இல்லற வாழ்வில், இராசராசன், இராசசேகரன், இராசேஸ்வரன், இராசமார்த்தாண்டன் ஆகிய புதல்வர்களையும், செல்வநாயகி என்ற புதல்வியும் பெற்றார். இராஜசேகரன், இராசமார்த்தாண்டனும் ஈழநாடு திரும்பி யாழ்ப்பான கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றி, தம் பங்களிப்பை தாய் நாட்டுக்கு வழங்கினர்.

இவர் ஆறுமுக நாவலர் அவர்கள் செந்தமிழ் வளர்ச்சி கருதி நடத்திய அச்சு இயந்திர சாலையில் வெளியிடப்படும் நூல்களுக்கு வழுக்களையும், பிறவற்றையும் திருத்தும் அரும்பணி செய்த ஒருவராவார். சி. வை. தாமோதரம்பிள்ளை, சுந்தரம்பிள்ளை, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் போன்றோரின் அனுசரணையுடன் பல நூல்களை பதிப்பித்து வெளியிட்டு உள்ளார். 1922 ஆம் ஆண்டு சி. கு. நாராயணசாமி முதலியார் எழுதிய "இரட்டைப் புலவர் சரிதம்" என்ற நூலின் 48 ஆம் பக்கத்தில் கால மேகப் புலவர் காலம் 1453 தொடக்கம் 1468 என திருவாளர் கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் ஆராய்ச்சி முகத்தால் விலக்கியிருப்பதாக விளக்கியுள்ளார்.

சென்னையில் இருந்த வித்துவான் இராசகோபால பிள்ளை அவர்களின் உதவியுடன் கம்பராமாயணத்தில் சில பாகங்களையும், வேறு சில நூல்களையும் மிக நுண்ணியதாக ஆராய்ந்து அறிந்தார்கள். மேலும் தொல்காப்பியத்தையும் சங்க காலத்தில் இலக்கியங்களையும் ஏற்று பிரதிகள் பலவற்றோடு ஒப்பு நோக்கிதாக நுண்ணியதாக ஆராய்ந்து உள்ளனர். இவர் பிறர் பலர் இயற்றிய நூல்களுக்கு கைமாறு கருதாமல் நூலுரைகளையும், திருத்தங்களையும் கடிதம் வாயிலாக தெரிவித்து உதவிய ஒருவர் ஆவார். மேலும் சி. வை. தாமோதரம்பிள்ளை, திருவனந்த சுந்தரம்பிள்ளை, பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் போன்றோர் வெளியீடுகளுக்கு கனகசுந்தரம்பிள்ளை அவர்களின் உதவி இன்றி அமையாது ஆக இருந்துள்ளது. இவர் நீண்ட காலமாக சென்னை சர்வ கலாசாலை பரீட்சகர்களுள் ஒருவராய் இருந்தமையோடு, நான்கு வருட காலம் பரீட்சகர் சங்கத்துக்கு தலைவராகவும் இருந்துள்ளார். மதுரை தமிழ் சங்கத்து பரீட்சகர்களுள் ஒருவராகவும், சென்னை கிறிஸ்டியன் கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் தமிழ் தலைமை புலவர் ஆகவும் இருந்துள்ளார். இவர் வெளியிட்ட பெருமை வாய்ந்த நூல்களில் ஒன்று, "ஈழ மண்டல தேவாரமும் திருப்புகழும்" என்பதாகும். இந்த நூலில் திருக்கோணமலை, திருக்கேதீஸ்வரம் பற்றிய தேவாரங்களும், திருப்பாசுரங்களும், திருப்புகழும் இடம் பெற்றுள்ளது. அத்தோடு இரு கேத்திரங்கள் பற்றியும், கதிர்காம ஸ்தலம் பற்றியும், அருணகிரிநாதர் இசை திருப்புகழ் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

மேலும் வடமொழியையும் கற்ற தனது பாண்டித்தியத்தை உயர்த்திக்கொண்டதுடன், பண்டிதர் நடேசன் சாஸ்திரியாருடன் இணைந்து வால்மீகி ராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தையும், சுந்தர காண்டத்தையும் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1911 ஆம் ஆண்டு இது வெளிவந்தது. மேலும் சென்னை பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட தமிழ் லெக்சிக்கணுக்கு உதவி ஆசிரியராகவும் செயல்பட்டார். மேலும் தமிழரின் புகழ் உலகெங்கும் ஓங்க அரும்பெரும் தொண்டாற்றிய இவர் 1922 ஆம் ஆண்டு ஆணித்திங்களில் இறைவனடி சேர்ந்தார்.



வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 159-164
  • நூலக எண்: 4136 பக்கங்கள் 01-13
  • நூலக எண்: 963 பக்கங்கள் 71-73
  • நூலக எண்: 13816 பக்கங்கள் 142-150
  • நூலக எண்: 15417 பக்கங்கள் 94-108
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 86-89