ஆளுமை:தங்கேஸ்வரி, கதிராமன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தங்கேஸ்வரி, க.
தந்தை கதிராமன்
தாய் திருமஞ்சனம்
பிறப்பு 1952.02.26
ஊர் கன்னங்குடா, மட்டக்களப்பு
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. தங்கேஸ்வரி மட்டக்களப்பின் கன்னங்குடாவில் கதிராமன், திருமஞ்சனம் தம்பதியரின் மகளாக 1952 பெப்ரவரி, 26ல் பிறந்தார். ஆரம்ப கல்வியை கன்னங்குடா மகாவித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும், உயர்நிலைக் கல்வியை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியிலும் கற்ற இவர் கழனிப் பல்கலைக் கழக பீ. ஏ. தொல்லியல் சிறப்புப் பட்டதாரியுமாவார்.

இவர் இலங்கையின் தொல்பொருளியல் வரலாற்று ஆய்வாளரும், எழுத்தாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாவார்.

ஆரம்பத்தில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தராகவும், 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைப்பெயர்களில் எழுதி வரும் இவரின் முதலாவது ஆக்கம் 1972ஆம் ஆண்டில் ‘தீபாவளி’ எனும் தலைப்பில் ‘வீரகேசரி’ பத்திரிகையில் பிரசுரமானது. இவர் தொடர்ந்தும் ஆய்வுக் கட்டுரைகள், கலாசாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார்.

புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்ந்துவரும் இவர் விபுலானந்தர் தொல்லியல், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம் முதலான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 137-138


வெளி இணைப்பு