ஆளுமை:பாயிஸா, நவ்பல்

From நூலகம்
Name பாயிஸா
Pages சேகுலெவ்வை
Pages கதீஜா உம்மா
Birth
Place மீராவோடை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாயிஸா, நவ்பல் மட்டக்களப்பு ஓட்டமாவடி மீராவோடையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சேகுலெவ்வை; தாய் கதீஜா உம்மா. இவருக்கு ஆறு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் உள்ளனர். இவரின் கணவரின் பெயர் நவ்பல். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவர் மட்டக்களப்பு மீராவோடை மகாவித்தியாலயம், வாழைச்சேனை அந்நூர் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றார். தையல், அழகுக்கலை, சமையல், விவசாயம் ஆகியவற்றில் டிப்ளோமா முடித்துள்ளார்.

ஒன்பது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர் பாயிஸா. பாடசாலைக் காலத்தில் பல போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசில்களையும் பெற்றுள்ளார். ஹைக்கூ கவிதைகள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதிய ஆயிரம் ஹைக்கூ கவிதைகள் கொண்ட தொகுப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நுட்பம் தையல் நூல், நுட்பக் குழந்தைகள் – சிறுவர்கள் நூல், நுட்பக் குழந்தைகள் இறுவட்டு, 1000 முத்துக்கள் ஹைக்கூ தொகுப்பு, கவிநுட்பத் துளிப்பா ஹைக்கூ நூல், நுட்பப் பாக்கள் கவிதை நூல், நுட்பம் குழுவின் ஆண்டு மலர், மனம்தொடும் மலர்கள் – கவிஞர்களின் தொகுப்பு நூல், நுளிப்பா மாலை பல ஹைக்கூ கவிஞர்களின் தொகுப்பு, சுவரெழுத்தின் ஆய்வுக்கட்டுரைகள் – பலரின் ஆய்வுக்கட்டுரை தொகுப்பு போன்ற தொகுப்பு நூல்களையும் இலக்கிய உலகிற்கு தந்துள்ளார். இவர் இயற்றிய சிறுவர் பாடல் 19 அடங்கிய இறுவட்டு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த சிறுவர் பாடல்களை இவரே இயற்றி மெட்டமைத்துப் பாடியுள்ளார். நுட்பம் இலக்கிய குழுமம் ஒன்றை அமைத்து அதன் தலைவியாகவும் இருந்து இலக்கிய பணி ஆற்றுகின்றார். இம்போட் மிரர் பத்திரிகை ஆசிரியையாகவும் செயற்பட்டு வருகிறார். அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி மகளிர் அணித் தலைவியாகவும் செயற்பட்டு வருகிறார். ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினராகவும் கடமையாற்றி வருகிறார். இலக்கியம், அரசியல் என பயணித்துக்கொண்டிருக்கின்றார் பாயிஸா நவ்பல்.

நுட்பம் இலக்கிய குழுமத்தின் நிறுவனரான இவர் மட்டக்களப்பு இலக்கிய பேரவையின் உறுப்பினர். தமிழா ஊடக வலையமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒருங்கிணைப்பாளர், மீராவோடை மகளிர் அமைப்பின் தலைவியுமாவார். மட்டுப்படுத்தப்பட்ட கல்குடா தொகுதி சுயதொழில் கூட்டுறவு சங்கத் தலைவியாகவுள்ளார்.

விருதுகள்

2017ஆம் ஆண்டு கவிச்சுடர் விருது, கவிமணி விருது, கவிநிலா, சிறந்த நிர்வாகிக்கான விருது, அன்னை தாய்மடி விருது, காதல் பழரசம் விருது.

1000 முத்துக்கள் நூலாசிரியருக்கான சிறப்பு விருது இலங்கை.

சாரல் விருது, ஊழலளா விருது, பூஞ்சோலை சிறப்பு விருது.

2018ஆம் ஆண்டு சென்னை ஹைக்கூ சிறந்த நூலுக்கான விருது.

குறிப்பு : மேற்படி பதிவு பாயிஸா, நவ்பல் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்