ஆளுமை:மைமுனா, செயினூலாப்தீன்

நூலகம் இல் இருந்து
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 07:51, 7 செப்டம்பர் 2018 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மைமுனா
தந்தை கிதிர்முகம்மது காதர் ஹாஜியார்
தாய் மரியம்
பிறப்பு 1932.08.25
இறப்பு -
ஊர் அம்பாறை
வகை சமூகசேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மைமுனா செயினூலாப்தீன் (1932.08.25) அம்பாறை, நிந்தவூரில் பிறந்த சமூகசேவையாளர், கல்வியாளர். இவரது தந்தை கிதிர்முகம்மது காதர் ஹாஜியார்; தாய் மரியம். இவரின் நான்கு வயதிலேயே தந்தையாரை இழந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து இவரின் பாட்டனார் இவரை கிராமத்தில் மூன்றாம் வகுப்பு வரை இயங்கும் பாடசாலையில் சேர்த்து விட்டார். அதற்கு மேல் இப்பிரதேசத்தில் படிக்கவிரும்பாதவர்களாகவே மக்கள் இருந்தார்கள். இப்படியான சூழலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகிழம்மா கிருஷ்ணானந்தம் அப்பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்று ஐந்தாம் வகுப்பு வரையில் மாணவர்கள் கல்வியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டதாக மைமுனா கூறுகிறார். மைமுனா தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கும்படி அவரின் பாட்டனாரிடம் அனுமதியைப் பெற்று மகிழம்மா கிருஷ்ணானந்தம், மைமுனா ஒருவரை மட்டும் வைத்துப் படிப்பித்து ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு அனுப்பி அகில இங்கையிலேயே முதலாமிடத்தில் சித்தியடையவைத்தார். தொடர்ந்து இவரை மட்டுமே தன்னந்தனியாகவே வைத்து ஆறாம் தரத்தையும் ஆரம்பித்து பத்தாம் வகுப்பு பரீட்சைக்கு அனுப்பி வைத்தார் அதிபர் மகிழம்மாள் கிருஸ்ணானந்தம். இவரை சித்தியடைய வைத்ததன் மூலம் இலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் மகாவித்தியாலயம் என்ற புகழை இந்தப் பாடசாலைப் பெற்றுக்கொண்டது. இப் பாடசாலையை உருவாக்கியது மகிழம்மாள் கிருஸ்ணானந்தம் என்பதை நன்றியுடன் நினைவுகூருகிறார் மைமுனா. சமூகசேவகி மைமுனா கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் கனிஷ்ட பயிற்சியுடன் அகில இலங்கை பண்டித பரீட்சையில் விசேடபிரிவில் சித்தியடைந்த முதலாவது முஸ்லிம் பெண் ஆசிரியை என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டவர். இவற்றிற்கு தனது கல்வித்தாய் மகிழம்மா கிருஷ்ணானந்தம் அவர்களே காரணமென்பதை நன்றியோடு நினைவுகூருகிறார். 1955ஆம் ஆண்டு அல்ஹாஜ் கே.செயினுலாப்தீனை மைமுனா திருமணம் செய்தார். இவருக்கு ஆறு பிள்ளைகள். இவர்கள் அனைவரும் உயர் கல்வியைப் பெற்ற நல்ல நிலையில் உள்ளனர். "உனக்கு உனது ஊர் என்ன செய்தது என்று நினையாதே நீ உனது ஊருக்கு என்ன செய்தாய் என்று நினை" என்ற தனது ஆசிரியர் மகிழம்மா கிருஷ்ணானந்தம் அவர்களின் தாரக மந்திரத்தை சிரத்தில் ஏந்தி தனது சமூக சேவைகளை செய்து வருவதாக கூறுகிறார் மைமுனா. இவரின் முதலாவது ஆசிரியர் நியமனம் பொத்துவில் மத்தியக்கல்லூரியாகும். முதலாவது இவரின் ஆசிரியர் நியமனமே இவருக்கு ஒரு சவாலாக இருந்தது. நான்காம் வகுப்புத் தொடக்கம் பத்தாம் வகுப்பு வரை ஆசிரியராகவும் அதிபராகவும் தமிழ், ஆங்கிலம் என எல்லாப் பாடங்களையும் இவரே மாணவர்களுக்கு கற்பித்து கொண்டுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார்.

மைமுனாவின் சமூக சேவையை குறிப்பிட வேண்டுமானால் இவர் கல்வி கற்ற முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தை அல்மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையாக தரம் உயர்த்தி பெயர் மாற்றிய ஸ்தாபக அதிபர் இவர் ஆவார். பாடசாலையை அமைக்கத் தேவையான கட்டடத்தை இடவசதியில்லாத காரணத்தினால் பக்கத்தில் இருந்த ஆண்கள் பாடசாலையில் போதியளவு காணி வெட்ட வெளியாகக் கிடந்தது. இதனை பொத்துவில் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை அவர்களின் உதவியுடன் ஆண்கள் பாடசாலையை பெண்கள் பாடசாலையாகவும் பெண்கள் பாடசாலையை ஆண்கள் பாடசாலையாகவும் இடம்மாற்றினார். தொடர்ந்து பெண்கள் பாடசாலைக்குத் தேவையான இரு மாடிக்கட்டடம், விஞ்ஞான ஆய்வுக்கூடம், சுற்றிவர மதிலையும் கட்டி, மின்சார, குடிநீர் வசதிகளையும் மைமுனா அவர்களின் முயற்சியினால் பாராளுமன்ற உறுப்பினரின் நிதியுதவியினால் செய்து முடிக்கப்பட்டமை இவரின் பெரும் சாதனையாக இங்கு குறிப்பிட வேண்டும். அல்மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை 13 மாணவிகளுடன் கலை, வர்த்தக பிரிவுகளை ஆரம்பித்து பரீட்சைக்கு 13 பேரையும் அனுப்பி வைத்த முதலாம் முறையே நூறு வீத சித்தியை அடைந்து சாதனை படைத்தது. இப் பாடசாலை இன்று பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமல்லாது பல பெண் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், நிர்வாகத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரையும் உருவாக்கி சமூகத்திற்கும் தேசத்திற்கும் பெருமைச் சேர்த்துள்ளது. இதேவேளை, இவரின் மகன் வைத்தியர் றபீக் அவர்களின் பெரும் முயற்சியினால் அப்போது புனர்நிமாணத்துறை அமைச்சராக இருந்த திரு.வின்சன்ட் பெரேராவின் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் மூலம் அல்மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலைக்கு மூன்று மாடிக்கட்டடம் ஒன்று அமைத்துக் கொடுக்கப்பட்டது. இது கல்முனை கல்வி வலயத்தில் அமைக்கப்பட்ட முதலாவது மூன்று மாடிகளைக் கொண்ட கட்டடம் என்பது சிறப்பம்சமாகும். இந்த பெருமைக்கு சொந்தக்காரி மைமுனா செய்னுலாப்தீன் என்பது மிகையாகாது. முடியாது என்பதை அகராதியில் இருந்து நீக்க வேண்டுமென சொல்லும் மைனாவின் சமூகப் பணி தொடர்கிறது. மைமுனா இலங்கையின் இரண்டாவது முஸ்லிம் பெண் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு மைனா செயிலாப்தீன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.