ஆளுமை:கணேசலிங்கன், செல்லையா

நூலகம் இல் இருந்து
Sharangan (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:50, 1 டிசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேசலிங்கன்
தந்தை செல்லையா
தாய் இராசம்மா
பிறப்பு 1928.03.09
ஊர் உரும்பராய்
வகை எழுத்தாளர், பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Kanesalinkan.sellaiya.jpg

கணேசலிங்கன், செல்லையா (1928.03.09 - ) யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த எழுத்தாளர், பதிப்பாளர். இவரது தந்தை செல்லையா; தாய் இராசம்மா. தனது ஆரம்பக்கல்வியை உரும்பராய் கிறிஸ்தவப் பாடசாலையிலும் சந்திரோதய வித்தியாலயத்திலும் பெற்று 6 ஆம் வகுப்பில் சித்திபெற்று பரமேஸ்வராக் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்தார். எஸ்.எஸ்.சி பரீட்சையில் சித்தியடைந்த இவர் இலண்டன் மெற்றிகுலேசன் பரீட்சையிலும் சித்தியடைந்தார். 1950ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டுவரை அரச சேவையில் இணைந்து பணியாற்றினார்.

கல்லூரியில் படிக்கும் காலத்தில் இவரின் படைப்புக்கள் சுந்திரன் இதழில் பிரசுரமாகின. தொடர்ந்து இவரின் கட்டுரை, நாவல், சிறுகதை முதலானவை ஈழகேசரி, வீரகேசரி, தினகரன் வெளியீடுகளில் பிரசுரமாகின. ஆக்க இலக்கியத் துறைகளில் மட்டுமல்லாது சமயம், சமூகவியல், அரசறிவியல், பெண்ணியம், கலை, திறனாய்வு போன்ற பல்வேறு துறைகளிலும் பெருமளவு எழுதலானார்.

1965இல் வெளிவந்த நீண்ட பயணம் என்ற நாவலினூடாகவே இவர் நாவலாசிரியராக அறிமுகமானார். இது ஈழத்து நாவல்களில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது. அதனைத்தொடர்ந்து நீ ஒரு பெண், வன்முறை வடுக்கள், ஒரு மண்ணின் கதை, மரணத்தின் நிழலில், இரண்டாவது சாதி, ஒரு பெண்ணின் கதை, விலங்கில்லா அடிமைகள், சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை, பொய்மையின் நிழலில், அயலவர்கள், புதிய சந்தையில், அந்நிய மனிதர்கள், வதையின் கதை, மண்ணும் மக்களும், போர்க்கோலம் உட்பட மேலும் பல நாவல்களையும் செ. கணேசலிங்கனின் சிறுகதைகள், நல்லவன், ஒரே இனம், சங்கமம் ஆகிய சிறுகதைகளையும் சிந்தனைக் கதைகள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள், உலகச் சமயங்கள், உலக அதிசயங்கள் ஆகிய சிறுவர் இலக்கியங்களையும் அறிவுக் கடிதங்கள், குந்தவிக்குக் கடிதங்கள், மான்விழிக்குக் கடிதங்கள், கௌடிலியரின் (சாணக்கியன்) அர்த்த சாத்திரமும் வள்ளுவரின் திருக்குறளும், மக்கியாவலியும் வள்ளுவரும், பகவத்கீதையும் திருக்குறளும், கலையும் சமுதாயமும், மு.வ நினைவுகள், உலகை மேம்படுத்திய சிந்தனையாளர்கள் உட்பட வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார்.

இவரது 'நீண்டபயணம்’ எனும் நாவல் சிறந்த நாவலுக்கான இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசையும், ‘மரணத்தின் நிழலில்’ எனும் நாவல் சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசையும் பெற்றுள்ளது. இவர் எழுதிய மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட புதினங்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிடுகிறார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 117-119
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 62-65
  • நூலக எண்: 13581 பக்கங்கள் 01-25
  • நூலக எண்: 1619 பக்கங்கள் 05-06
  • நூலக எண்: 13389 பக்கங்கள் 41-43