ஆளுமை:சாந்தகுமாரி, கமலகாந்தன்

From நூலகம்
Name சாந்தகுமாரி
Pages செல்வரத்தினம்
Pages செல்லம்மா
Birth 1965.03.02
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சாந்தகுமாரி, கமலகாந்தன் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பிறந்த கலைஞர். இவரது தந்தை செல்வரத்தினம்; தாய் செல்லம்மா. ஆரம்பக் கல்வியை யாழிலும் பின்னர் தனது தாயாரின் சொந்த இடமான முள்ளியவளையிலும் கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தின் இசைக்கலைமாணிப் பட்டத்தை 1990ஆம் ஆண்டில் பெற்றார். ஆரம்ப இசையை சதாசிவம் அர்களிடமும் ஏ.கே.கருணாகரன், ஜெகதாம்பிகை, இராமநாதன் ஐயர், பதம்லிங்கம், பாலசிங்கம் போன்ற ஜாம்பவான்களிடம் கற்றார். 2017ஆம் ஆண்டு முதுகலைமாணிப்பட்டத்தைப் பெற்றார்.

இவர் இசை பாரம்பரிய குடும்பத்தை கொண்டவராவார். இவரது சகோதரன் முல்லை ஜெயா ஜேர்மனியில் இருந்து கொண்டு தமிழரின் கலைப் பொக்கிசங்களை பாதுகாப்பதிலும் வளர்ப்பதிலும் தன்னாலான பங்களிப்பை வழங்கியுள்ளார். இவரின் கணவரும் சிறந்த பாடகர் ஆவார்.

1979, 1980, 1981ஆம் ஆண்டுகளில் மு/வித்தியானந்தாக் கல்லூரியில் பல இலக்கிய நாடகங்களில் நடித்து தேசிய மட்டத்தில் முதலிடங்களைப் பெற்று பாடசாலைக்கு நற்பெயரைப் பெற்றுக்கொடுக்கும் மாணவர்களுள் இவரும் ஒருவர். இவர் கற்ற கல்வி பெற்றுக்கொண்ட அனுபவமும் எல்லாம் சேர்ந்து போராட்ட காலத்திலும் இன்றும் இவருடைய மாணவர்களை வழிநடத்த இவருக்குதவியது. இவருடைய மகனும், தாய் வழியிலேயே இசையினைக் கற்று இன்று இந்தியாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையைக் கற்றுக் கொண்டிருக்கிறார்.

1991ஆம் ஆண்டு தொடக்கம் ஆசிரியர் சேவையில் இணைந்து கொண்டார். 1998ஆம் ஆண்டு வன்னியின் தாரகை என்று அழைக்கப்படும் மு/வித்தியானந்தாக் கல்லூரியில் கடமை ஆற்றிய சமயம் பாடசாலை மாணவர்களை ஒரு போட்டிக்காக மல்லாவி பிரதேசத்துக்கு அழைத்து சென்ற போது தனது வீட்டில் ஏற்பட்ட ஓர் விபத்தில் மகளை இழக்க நேரிட்டது. தொடர்ந்து தனது ஊரில் இருக்க விரும்பாது 2000ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரை திருகோணமலை சென்மேரிஸ் கல்லூரியில் இசை ஆசிரியராக கடமை ஆற்றினார்.. இக்காலப் பகுதியில் கல்வி பொதுத்தராதர உயர்தரத்துக்கான கர்நாடக இசை வினாவிடைப் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். 2004ஆம் ஆண்டு மீண்டும் தனது பிரதேசத்தில் கடமை ஆற்ற திரும்பினார். இவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் இசை ஆயிரியர்காளவும் விரிவரையாளர்களாகவும் உயர் பதவி வகிப்பதை காணக்கூடியதாகவுள்ளது. மிகவும் பெரிய மாணவிகளைக் கொண்ட இன்னியம் எனும் கீழைத்தேச வாத்தியக் குழுவினை பல வருடங்களாக நடாத்தி வருகிறார். 2011ஆம் ஆண்டு ஆசிரிய ஆலோசகராக பதவியுயர்வு பெற்றார். இத்தொழிலில் மனம்லயிக்காது போகவே மீண்டும் ஆசிரியராக 2012ஆம் ஆண்டு மு/வற்றாப்பாளை மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமை ஏற்றார்.

இசை மட்டுமின்றி நடிப்புத்துறையிலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தமையினால் பல நாடகங்களை நெறியாள்கை செய்து மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். போராட்ட காலத்தில் திரு.கண்ணதாசன் என்பவரால் உருவாக்கப்பட்ட நுண்கலைக்கல்லூரியில் இவரும் ஒரு ஆசிரியராக இருந்து பல நூற்றுக்கணக்கான மாணவர்களை கலைத்துறையில் மிளிரச் செய்தார். 2009ஆம் ஆண்டு இடப்பெயர்வின் பின் இந் நுண்கலைக் கல்லூரியானது செயலிழந்து இருந்தது. 2014ஆம் ஆண்டு மீண்டும் இவருடைய அயராத உழைப்பால் அக்கல்லூரியை உருவாக்கி இன்று வரை அதன் தலைவராக இருந்து செயற்பட்டு வருகிறார்.

பாடசாலைகளுக்கு இடையே நடைபெறும் கலைத்திறன் போட்டிகளில் ஏனைய மாவட்டங்களோடு போட்டியிட்டு தேசிய ரீதியில் முதலிடத்தை பெறமுடியாது என்ற எண்ணத்தை முதன்முதலில் 2013ஆம ஆண்டு உடைத்தெறிந்த்தார். குறைவான வளங்களைக் கொண்ட இவரது பாடசாலையானன மு வற்றாப்பளை மகா வித்தியாலயம் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட நாட்டாரிசை போட்டியில் போட்டியில் பங்குபற்றி முதலிடத்தை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தை தலைநிமிரச் செய்தது.

1974ஆம் ஆண்டு முள்ளியவளை கிராமத்தில் வசித்து வந்த திரு.நா.நடராஜ அய்யர் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட் வில்லிசை நிகழ்வானது வீறு நடைபோட்டாலும் காலம் செல்லச் செல்ல அதன் வளர்ச்சி குறைந்து போவதை கண்டு 2019ஆம் ஆண்டு மிகக் கடுமையான முயற்சியின் காரணமாக மு/வற்றாப்பளை மகா வித்தியாலய மாணவர்களுக்கு அதனைப் பழக்கி தேசிய மட்டத்திலும் முதலிடத்தைப் பெற்றுக் கொள்ள இவர் வழிசமைத்தார். இந்நிகழ்வினை நெறியாள்கை செய்தமைக்காக முல்லை இசைப் பேரொளி எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர்.

முல்லை மண்ணில் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், கும்மி, மகுடி, கூத்து, வில்லிசை, குடமூதல், கரகம் என கலைவடிவங்கள் ஆகிய கிராமிய கலை வடிவங்கள் தமது முகவரியை இழந்து நிற்கின்ற நிலையில் 2018, 2019ஆம் அண்டு கலாசார திணைக்களத்தால் மன்றங்களுக்கிடையே நடாத்தப்பட்ட ஆக்கத்திறன் போட்டியில் பங்குபற்றி வடமாகாணத்தில் முதலிடத்தை பெற்று நுண்கலைக்கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளது. இதில் இடம்பெற்ற வில்லிசை நிகழ்வை இவரே நெறியாள்கை செய்தார்.

விருதுகள்

இலங்கை அரசினால் சிறந்த ஆசிரியர்களுக்காக வழங்கப்படும் பிரதீபா பிரபா விருது 2013ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

முல்லை இசைப் பேரொளி

முல்லை பேரொளி கரைதுறைப்பற்று பிரதேச செயலகம்

சிறந்த பெண்மணி

குறிப்பு : மேற்படி பதிவு சாந்தகுமாரி, கமலகாந்தன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.