ஆளுமை:இன்பமோகன், வடிவேல்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இன்பமோகன்
தந்தை வடிவேல்
தாய் பாக்கியம்
பிறப்பு 1969.08.12
இறப்பு -
ஊர் குருக்கள் மடம், மட்டக்களப்பு
வகை நுண்கலைத்துறைப் பேராசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வடிவேல் இன்பமோகன் (1969.08.12) கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் ஆவார். இவர் மட்டக்களப்பு , குருக்கள் மடம் எனும் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நகரை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது தந்தை வடிவேல்;தாய் பாக்கியம். இவரது மனைவி ரஜிகலா ஆவார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உண்டு. இவர் தனது கல்வியினை மட்/குருக்கள் மடம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் தரம் வரைக்கும் கற்றுள்ளார். கிழக்குப் பல்கலைக்கழத்தின் கலை கலாசார பீடத்தின் முதலாவது மாணவர் தொகுதியைச் சேர்ந்தவர். இவர் தனது முது தத்துவமாணி மற்றும் கலாநிதிப் பட்டப்படிப்புக்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையில் பெற்றார். பேராசிரியர் வ.இன்பமோகன் அவர்கள் ஈழத்துக் கூத்து மரபு, கிழக்கிலங்கைச் சடங்குகள், இலங்கை வேடுவர் சமூகம், இந்தியக் கலைகள், சினிமா, தமிழ் நாட்டாரியல் என்பவற்றைப் பிரதான அய்வுத் துறையாகக் கொண்டு பல ஆய்வு நூல்களையும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் வெளியிடடுள்ளார்.

இவரால் வெளியிடப்பட்ட நூல்கள் பின்வருமாறு: கிழக்கிலங்கைச் சடங்குகள், இந்தியக் கலையும் இரசனையும், கலைத்துவ சினிமா, கூத்துப் பண்பாடு, இலங்கையில் வேடர் வாழ்வியலும் மாற்றங்களும், மரபுக்குப் பின் மட்டக்களப்பின் நாடகங்கள், நுண்கலை ஓர் அறிமுகம், இந்தியக் கட்டிடக்கலை போன்றனவாகும். இவரால் பதிப்பிக்கப்பட்ட நூல்கள்- குருக்கேத்திரன் போர் வடிமோடிக் கூத்து, சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து, ஐரோப்பிய மெய்யியல் வரலாறு, சைவ சித்தாந்தம் மறுபார்வை அறிவாராய்ச்சியியல், நாட்டார் வழக்காற்றில் சடங்குகளும் சமூக மரபுகளும் என்பனவாகும்.

இவற்றுள் கிழக்கிலங்கைச் சடங்குகள் (2012), கலைத்துவ சினிமா (2012), சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து (2018), கூத்தப் பண்பாடு (2019) என்பன கிழக்கு மாகாண சபையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதுகளைப் பெற்றவை.பாரம்பரிய கூத்துக்களைப் பேணும் அவரது முயற்சிகளில் ஒன்றாக குருக்கள் மடம் கிராமத்தில் கடந்த மூன்று தசாப்தங்களின் பின்னர் குருக்கேத்திரன் போர் வடிமோடிக் கூத்து (2016ஆம் ஆண்டு), சயிந்தவன் வதை வடமோடிக் கூத்து (2018ஆம் ஆண்டு) ஆகிய பாரம்பரிய கூத்துக்களைப் பயிற்று வித்து அரங்கேற்றியமையைக் குறிப்பிடலாம்.

மற்றும் இலங்கையில் இருந்து வருடம் இருமுறை வெளிவரும் பிரதான ஆய்வுச் சஞ்சிகைகளில் ஒன்றான “மொழிதல்” சஞ்சிகையின் ஆசிரியர்களில் ஒருவராகச் செயற்படுகின்றார். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் தலைவராகக் கடமையாற்றிய இவர் தற்போது கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பட்டப்பின் படிப்புக்கள் கற்கைப் பிரிவின் இணைப்பாளராகவும் சேவையாற்றி வருகிறார்.