ஆளுமை:பரமசாமி, வல்லிபுரம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமசாமி, வல்லிபுரம்
தந்தை வல்லிபுரம்
பிறப்பு 1926.03.08
இறப்பு 2005.10.25
ஊர் அரியாலை
வகை கலைஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வ. பரமசாமி (1926.03.08 - 2005.10.25) யாழ்ப்பாணம் அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலைஞன். இவரது தந்தை வல்லிபுரம். கலைக்குடும்பத்தின் வாரிசான இவர் பண்ணோடு தேவார, திருவாசகங்களை ஓதுவதில் வல்லவராக விளங்கினார். இவர் ஆரம்பக் கல்வியை அரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலையிலும், இடைநிலைக் கல்வியை யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றுத் தேறினார். வட இலங்கை சங்கீத சபைப் பரீட்சையில் ஆசிரியர் தரம் வரை சித்தியடைந்த இவர் 1952ஆம் ஆண்டு இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பிரதான பாடமாக வயலின் இசையையும், துணைப் பாடமாக வாய்ப்பாட்டு இசையையும் கற்றுத் தேர்ந்தார்.

1959ஆம் ஆண்டு இசை ஆசிரியராக நியமனம் பெற்று, தான் கல்வி கற்ற யாழ்.அரியாலை ஶ்ரீ பார்வதி வித்தியாசாலையில் பன்னிரண்டு வருடங்கள் பணிபுரிந்து பின்னர் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் கல்லூரி, யாழ்ப்பாணம் சன்மார்க்க வித்தியாலயம் ஆகியவற்றில் சேவையாற்றி ஓய்வு பெற்றார்.

யாழ்.நல்லூர் அண்ணாமலை இசைத்தமிழ் மன்றத்தில் இணைந்து இருபத்திநான்கு வருடங்கள் கலைச்சேவை புரிந்தார். அரியாலை சங்கீத பூஷணம் ச.பாலசிங்கம் அவர்களோடு சேர்ந்து அரியாலை இரட்டையர்கள் என்ற பெயரில் இசைச் சங்கம நிகழ்ச்சிகளை வழங்கினார். நல்லூர் பிரதேச கலசாரப் பேரவையால் பண்ணிசைக்கான கலைஞானச்சுடர் விருதினை 2002ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். அத்தோடு 2004ஆம் ஆண்டு இலங்கை அரசின் கலாபூஷணம் விருதினையும் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 83