ஆளுமை:அருட்தந்தை வண பிதா Eugene Hebert S. J

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருட்தந்தை வண பிதா Eugene Hebert S. J
பிறப்பு 1923.10.09
இறப்பு 1990.08.15
ஊர் Jennings, Louisiana, United States
வகை அருட்தந்தை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருட்தந்தை வண பிதா Eugene Hebert S. J 1923ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்த இவர், தனது 17 வயதில் இலங்கைக்கு வந்து தான் சாகும் வரையில் கிழக்கு மண்ணில் வாழ்ந்து, எமது திருகோணமலை நகரத்து மண்ணிற்கும், மட்டக்களப்பு மண்ணிற்கும் கல்வித்துறை மற்றும் விளையாட்டு துறைகளுக்கு அளப்பரிய சேவையாற்றிய, இலங்கை தமிழர்களின் நியாயமான உரிமைக்காய் குரல் கொடுத்தவர் ஆவார்.

அமெரிக்காவில் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்ற யேசு சபையில் இணைந்து அருட்தந்தை வண பிதா Eugene Hebert S. J அவர்கள் புனித சூசையப்பர் கல்லூரி ஆசிரியராகவும், தொழில்நுட்ப பயிற்சி கல்லூரியின் ஸ்தாபகராகவும் செயற்பட்டதுடன், திருக்கோணமலை நகரத்து விளையாட்டுத்துறைக்கும் பெரும் பங்காற்றியுள்ளார். குறிப்பாக திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் கூடைப்பந்தாட்டத்திற்கு அருட் தந்தை ஆற்றிய பணிகள் அதிகமானதால் அந்த கூடைப்பந்தாட்டம் எமது திருகோணமலை மண்ணில் சிறக்க வழிகோலியது என்பதை கருத்தில் கொண்டு புனித சூசையப்பர் கல்லூரி கூடைப்பந்தாட்ட அரங்கிற்கு அவர் பெயரே சூட்டப்பட்டுள்ளது.

அருட்தந்தை வண பிதா Eugene Hebert S. J அவர்களின் பணக்காரக் குடும்பம், அவரது பிறந்த நாள் பரிசாக ஒவ்வொரு வருடமும் வழங்கும் வாகனமும் மக்களுக்கு அறப்பணி செய்ய யேசு சபைக்கு அதிகம் உதவியது என்பதோடு, இந்த அருட்தந்தையின் குடும்பத்தவரின் பேருதவி அந்த காலத்திலேயே புனித சூசையப்பர் கல்லூரி 50க்கும் மேற்பட்ட கூடைப்பந்துகளை வைத்திருக்கும் அளவிற்கு வசதிகளைக் கொண்டு இருந்தது.

அத்தோடு அருட்தந்தை வண பிதா Eugene Hebert S. J அவர்களால் உருவாக்கம் பெற்ற திருகோணமலை தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி, எமது மண்ணின் மைந்தர்களுக்கு இன்று வரை ஆக்கபூர்வமான தொழில்நுட்ப அறிவை வழங்கி வருவதுடன், அவர்களில் சிலருக்கு பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு ஈடான வாழ்க்கையை வரப்பிரசாதம் ஆக்கி இருக்கின்றது.

இவரது பணி மட்டகளப்பு நகரத்திலும் தொடர்ந்தது. புனித சூசையப்பர் கல்லூரி போன்று புனித மிக்கேல் கல்லூரியில் தொடர்ந்த அடிகளாரின் சேவை, அந்தக் கல்லூரியை இலங்கை திரு நாட்டில் தேசியரீதியில் கூடைப்பந்தாட்டத்தில் "வெல்லப்பட முடியாத அணி" என்னும் நிலலைக்கு உயர்த்தியது.

இதனைவிட இலங்கையில் இனங்களுக்கு இடையிலாலன முரண்பாடுகள் வந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காகக் குரல்கொடுத்த, அருட் தந்தை அவர்கள் 1990ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்.

1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வாழைச்சேனை பகுதியில் இராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் முற்றுகையிடப்பட்டிருந்த தமிழ் மக்கள், கிறிஸ்தவ குருவானவர்கள், அருட்சகோதரிகள் போன்றோரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றிவிட்டு, தனது வாகன ஓட்டுனரான 'பேட்ரம் பிரான்சிஸ்' என்ற தமிழ் இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போது, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஏறாவூர் பகுதியில் Friday Army என்று தம்மை அழைத்துக் கொண்ட முஸ்லிம் ஊர்காவல் படையினரால் வெட்டப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சாட்சி பகர்கின்றார்கள். அந்த படுகொலையை நேரில் பார்த்த இரண்டு சாட்சிகள் நடந்த சம்பவத்தை உறுதியப்படுத்தியிருக்கின்றார்கள்.

“பாதர் ஹேபியர்” என்று தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட Fr. Eugene John Herbert மற்றும் அவரது வாகன ஓட்டுனரான Bertram Francis போன்றவர்கள் ஏறாவூர் புகையிரதப் பாதையை ஒட்டிய ஒரு சிறிய வீதியில் உள்ள ‘கரிக்கோச்சியடி’ என்ற இடத்தில் வைத்து, சிறிலங்கா இராணுவத்தினரின் கண் முன்பே அவர்கள் கொல்லப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.