ஆளுமை:அருந்ததி, ஶ்ரீரங்கநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருந்ததி, ஶ்ரீரங்கநாதன்
தந்தை சிவசுப்பிரமணியம்
தாய் வீரலஷ்மி
பிறப்பு 1946.02.24
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
ArunthathiSriranganaathan.jpg

அருந்ததி, ஶ்ரீரங்கநாதன் (1946.06.24 - ) ஒரு கலைஞர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம்; தாய் வீரலஷ்மி. இவர் தனது ஆரம்பக் கல்வியைக் கொழும்பு இந்து மகளிர் கல்லூரியிலும் உயர்கல்வியை வேம்படி மகளிர் கல்லூரியிலும் பயின்று, பட்டப்படிப்பைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்று பீ.ஏ. சிறப்புப் பட்டத்தைப் பெற்றார். படிக்கும் காலத்தில் வட இலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரப் பரீட்சைக்குத் தோற்றி வாய்ப்பாட்டிலும் வீணையிலும் டிப்ளோமாச் சான்றிதழ்களைப் பெற்றார். அம்பிகா தாமோதரம், ஞான குலேந்திரன், கேரளாவைச் சேர்ந்த சங்கீத வித்துவான் அந்தனி மாஸ்டர், இசை மேதை மஹாராஜபுரம் சந்தானம் ஆகியோரிடம் இசைக் கலையையும் கயிலாயம்பிள்ளை மாஸ்டர், ஜயலக்‌ஷ்மி கந்தையா, பாலசுந்தரி பிராதலிங்கம் ஆகியோரிடம் நடனக் கலையையும் ஆந்திராவைச் சேர்ந்த செல்வி ராஜா, மற்றும் கல்யாண கிருஷ்ண பாகவதர் ஆகியோரிடம் வீணை இசைக் கலையையும் கற்றுத் தேர்ந்தார்.

சங்கீதத்தில் சாஸ்திரீய இசை, சாஸ்திரீய வாத்திய இசை, மெல்லிசை, பக்திப் பாடல்கள் ஆகிய நான்கு துறைகளிலும் பாண்டித்தியம் பெற்றார். இலங்கை வானொலியின் குரல் பரீட்சையில் தேறிய ஒரே தமிழ்க் கலைஞர் என்ற தனித்துவமான பெருமை இவருக்கு உண்டு. 100 கர்நாடக இசை விற்பன்னர்களைக் கொண்ட தேசிய இசைக் குழுவை அமைத்து மேடையில் நிகழ்ச்சிகளை அளித்த போது மற்றவர் எவரும் துணியாத முயற்சியைப் புரிந்தவர் என இசையுலகின் ஏகோபித்த பாராட்டுதல்களையும் கலாரசிகர்களின் பேராதரவையும் பெற்றார்.

1995 இல் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டிலும் யப்பான், டோக்கியோ நகரில் நடைபெற்ற புலமை உரிமைப் பதிவு கருத்தரங்கிலும் சர்வதேச சங்கீத விற்பன்னர்கள் சம்மேளனத்தின் கருத்தரங்கிலும் பங்குபற்றியுள்ளார். மேலும் அவுஸ்திரேலிய சிட்னி நகரில் நடைபெற்ற நாட்டிய அரங்கேற்றத்தை தன் நாட்டியப் பாடல்களால் சிறப்பிக்கச் சென்ற இவருக்கு சிட்னி, மெல்போன் நகரங்களில் வாய்ப்பாட்டுக் கச்சேரி, வீணைக் கச்சேரிகளைப் புரியும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன.

கலாசூரி தேசிய விருது, அடிப்படை சங்கீத நிகழ்ச்சித் திட்டத்துக்கான யப்பான் விருது, சொண்டா சர்வதேசப் பெண்களமைப்பின் சாதனைப் பெண்மணி விருது, வானொலியின் சிறந்த அறிக்கையாளர் விருது, இன்னிசைக் கலாநிதி, சங்கீத கலாநிதி, கலைச்செம்மல், இசைஞான கலாநிதி, விஸ்வப்பிரசாதினி, சங்கீத சிரோன்மணி, சார்க் அமைப்பின் திறமையான பெண்மணி விருது எனப் பல விருதுகளைப் பெற்ற இவரது பெயர் சர்வதேச சாதனையாளர் வரலாற்று அகராதியின் 25 ஆவது பதிப்பில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதே.

வளங்கள்

  • நூலக எண்: 1950 பக்கங்கள் 80-87