ஆளுமை:அருளானந்தம், சண்முகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளானந்தம்
தந்தை சண்முகம்
பிறப்பு
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளானந்தம், சண்முகம். திருகோணமலை, ஆலங்கேணியைச் சேர்ந்த எழுத்தாளர். பட்டதாரியான இவர் ஆசிரியர், அதிபர், பிரதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார். இவரது படைப்புக்களான சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து ஆகியன சுதந்திரன், சிந்தாமணி, தினகரன், வீரகேசரி, தினமுரசு, தினக்கதிர், ஈழமணி, வெற்றிமணி, குமரன் ஆகிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் இதுவரை 25 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இலங்கை அரசு கலாபூஷணம் பட்டத்தையும், வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம் சிறுவர் இலக்கிய வித்தகர் பட்டத்தையும் இவருக்கு வழங்கியுள்ளது.

இவர் தனது சிறுவயதை ஆலங்கேணியில் கழித்துடன், கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் கற்றார். மேற்கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்று தேர்ந்தார். இவர் தனது கல்வி செயற்பாட்டை ஒரு ஆசிரியராக ஆரம்பித்ததுடன் கல்விப் பணியில் உயர்ந்து, கல்விப் பணிப்பாளர் போன்ற உயர் பதவிகளையும் வகித்துள்ளார். இவர் ஆங்கில ஆசிரியராக , அதிபராக, வவுனியா கோட்டக் கல்வி மற்றும் மாவட்டக் கல்வி அதிபராக , கல்வி அமைச்சின் மேலதிக மாகாணக்கல்விப் பணிப்பாளராகவும், ஓய்வு பெற்ற பின் பல அரச சார்பற்ற நிறுவனங்களில் வளவாளராகவும், பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றி, ஒபர் நிறுவனத்தின் அனர்த்த முகாமைத்துவம், கல்வி ஆலோசகராகவும் கடமையாற்றியவர்.

கேணிப்பித்தன் என்ற புனைப்பெயருடைய எழுத்தாளராக திகழ்ந்து வருகின்றார். பதின்நான்கு வயது தொடக்கம் ஐம்பது வருடங்களாக இலக்கியத்துறையில் பயணித்த இவரது முதற்படைப்பாக “இராவணன் கண்ணீர் “ எனும் சிறுகதை 1964ல் சுத்தந்திரன் பத்திரிகையிலும், “ஏனிந்தப் பிறவி “ எனும் கவிதை சிந்தாமணிப் பத்திரிகையிலும் வெளிவந்தது. இன்பக் கனிகள், உல்லாசப் பயணம், கனவு மெய்பட வேண்டும், அனர்த்த முகாமைத்துவம் ஓர் அனுபவ அணுகு முறை, கேணிப்பித்தன் கவிதைகள் என நூற்றிற்கும் மேற்பட்ட நூல்களை தனது எழுத்துத்துத் திறமையால் படைத்த இவரது நூல்களுள் பதினைந்து நூல்கள் மாகாணப் பரிசும், ஆறு நூல்கள் சாஹித்ய விருதும் பெற்று திருமலையின் புகழ் பெற்ற கவிஞராகத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சுதந்திரன், தினகரன், வீரகேசரி , சிந்தாமணி, தினமுரசு, தினக்கதிர், ஈழமணி போன்ற பத்திரிகைகளிலும், வெற்றிமணி, குமரன் எனும் பல சஞ்சிகைகளிலும் எழுதி வந்துள்ளார்.

இவருடைய இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையைச் சித்தரிப்பதாயும், சமுதாய மேம்பாட்டிற்கு வழிவகுப்பதாகவும் படைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் வவுனியாவில் பல கிராமங்களிலும் பாடசாலைகளை உருவாக்குவதில் அரும்பணியாற்றியுள்ளார்.

1990 கௌரவ ஆளுநர் விருது , 2004 கலாபூஷணம் அரச விருது, மதுக்கினிய பாட்டு (சிறுவர் பாடல்) அகில இலங்கை சாகித்திய விருது, கிழக்கு மாகாண சாகித்திய விருது , வவுனியா நண்பர்கள் இலக்கிய வட்டம் அளித்த சிறுவர் இலக்கிய விருது, கிழக்கு மாகாண சாகித்திய ஆளுநர் விருதுப் போன்ற விருதுகளையும், சின்ன தேவதைகள் (சிறுவர் கதை) இலங்கை நூலக ஆவணவாக்கற் சேவைகள் சபையில் பரிசு போன்ற பல பரிசுகளையும் பெற்றவர்.


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 1778 பக்கங்கள் 17
  • நூலக எண்: 1035 பக்கங்கள் 6-8