ஆளுமை:உமறு நெய்னா புலவர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உமறு நெய்னா புலவர்
தந்தை -
தாய் -
பிறப்பு 1907
இறப்பு 1963
ஊர் மூதூர், திருக்கோணமலை
வகை கவிஞர்
புனை பெயர் இலக்கணப்புலி, பழமைவாதி, நிரம்பிய தமிழ் புலமையாளன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


உமறு நெய்னா புலவர் அவர்கள் திருகோணமலை, மூதூர் குளத்தடி தெரு (ஜாயா வீதி) பகுதியில் 1907 இல் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை திருவாளர் அருளப்பு றோச் வாஸ் அவர்களின் திண்ணைப்பள்ளியில் கற்றார்.

தமிழ் இலக்கணத்தை சேனையூரைச் சேர்ந்த திருவாளர் பத்தினியன் பரிகாரி அவர்களிடம் முறையாகக் கற்றார். மூதூர் சவரிமுத்துப் பண்டிதரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றறிந்தார். யாழ்ப்பாணத்திலும் கல்வி கற்று "தமிழ் இலக்கண வித்துவான்" என்ற பட்டமும் பெற்றிருந்தார். சமூக சேவையில் நாட்டம் கொண்டிருந்த இவர் ஆசிரியராக மூதூர், சம்பூர், கிண்ணியா, தோப்பூர் ஆகிய இடங்களிலும் பணிபுரிந்துள்ளார்.

மரபுக் கவிதையில் வல்லவரான இவரை "இலக்கணப்புலி", "பழமைவாதி", "நிரம்பிய தமிழ் புலமையாளன்" என்று தமிழ் ஒளி வ. அ. இராசரெத்தினம் அவர்கள் புகழ்ந்துள்ளார். 1959 களில் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கான "இஸ்லாம் மதபோதினி" என்ற நூலை வெளியிட்டார். வ. அ. இராசரெத்தினம் அவர்களின் தூண்டுதல் காரணமாக சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்கு (பதவுரை, பொழிப்புரை, இலக்கண விளக்கம்) உரை எழுதி 1960களில் வெளியிட்டார்.

மூதூரில் உள்ள அல்-ஹிதாயா மகாவித்தியாலயம் (அக்கரைச்சேனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை) உருவாவதற்கு புலவரே முக்கிய காரணம் என கூறப்படுகின்றது. மூதூர் நத்துவத்துல் உலமா சபையினர் வேண்டிக் கொண்டதற்கமைய புகாரி கந்தூரியைப் பற்றி 1961 ஆம் ஆண்டில் "புகாரிக்காவியம்" எழுதியுள்ளார். இவர் 1963 ஆம் ஆண்டில் மறைந்து வெகு நாட்களின் பின்னரே இவரது "நீதிக்கதைகள்", "பெண்கல்வி", "இஸ்லாமியக்குறள்கள்", "சோபனம்", "நபி மொழிகள் (வெண்பா)" முதலிய பிரதிகள் அச்சேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றை அச்சிட்டு வெளியிட்ட ஜனாப். கே. எம். எம். இக்பால் அவர்களின் சேவை என்றும் போற்றுதற்குரியது.

இவரது கவிதைத் தொகுப்புகளை "மூதூர் உமர் நெய்னாப் புலவர் கவிதைகள்" என்னும் பெயரில் இவரது பேரன் மூதூர் எம். எம். ஏ. அனஸ் அவர்கள் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு இக்காலத்தில் இவர் பெயரில் மூதூரில் "உமர் நெய்னாப் புலவர் கழகம்" இயங்கி வருகின்றது.