ஆளுமை:கணேஷ், கருப்பண்ணபிள்ளை

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:கணேஷ், கே. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணேஷ்
தந்தை கருப்பண்ணபிள்ளை
தாய் வேளூரம்மா
பிறப்பு 1920.03.02
இறப்பு 2004.06.05
ஊர் அம்பிட்டி, கண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேஷ், கருப்பண்ணபிள்ளை (1920.03.02 - 2004.06.05) கண்டி, அம்பிட்டி, தலைப்பின்னாவயைச் சேர்ந்த எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இவரது தந்தை கருப்பண்ணபிள்ளை; தாய் வேளூரம்மா. சித்திவிநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், தன் ஆரம்பக்கல்வியைத் தோட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள Baptist Mission பெண்கள் கல்லூரியில் சிங்களமொழி மூலமும் கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் ஆங்கிலமொழி மூலமும் பின்னர் மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் திருவையாறு ராஜா கல்லூரியிலும் கல்வி கற்றார். தமிழ்மொழியைத் தனது தாயார் மூலம் வீட்டில் கற்றுத் தெளிந்துள்ளார். 1934 ஆம் ஆண்டு முதல் இராமநாதபுரம் அரசரின் உறவினரான சேத்தூர் ஜமிந்தார் பாண்டித்துரை தேவர் அவர்களின் ஆதரவுடன் தொடங்கபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்திலும் சிலகாலம் கல்வி பயின்றவர்.

இவர் தனது பன்னிரண்டாவது வயதில் (1932) பாடசாலைக் காலத்தில் எழுத்து முயற்சிகளை ஆரம்பித்த போதும் ஆனந்தபோதினியில் (தமிழ்நாடு) எழுதிய 'அறம் செய்ய விரும்பு' கட்டுரையினூடாகவே எழுத்துலகில் பிரவேசித்தார். தொடர்ந்து சித்தார்த்தன், கலாநேசன், கே.ஜி, மலைமகள், கணேசு ஆகிய புனைபெயர்களில் மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சக்தி, ஹனுமான், தென்றல் போன்ற பல ஏடுகளினூடாக எழுதினார். இவர் அதிகளவு பிறநாட்டு இலக்கியங்களைத் தமிழ்மொழிக்கு மொழிபெயர்த்தார். அத்துடன் ஆசாபாசம், சட்டமும் சந்தர்ப்பமும் உட்பட 7 சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் என பல்துறைகளில் கால் பதித்தார். இவரது கவிதைகள் நவசக்தி, லோகசக்தி போன்ற தமிழக இதழ்களிலும் வெளிவந்தன.

1940களில் மணிக்கொடி இதழில் இரண்டு சிறுகதைகள் எழுதியுள்ளார். வீரகேசரி, தேசாபிமானி ஆகியவற்றில் சிறுகதைகள் எழுதினார். 1940களின் பிற்பகுதியில் வீரகேசரியில் ஆசிரியர் குழுவிலும், 1950களில் சுதந்திரனில் செய்தியாசிரியராகவும் பணியாற்றினார். இவர் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1940களின் நடுப்பகுதியில் இலங்கை வந்த எழுத்தாளர் முல்க்ராஜ் ஆனந்த் முன்னிலையில் இலங்கை எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்தார். சுவாமி விபுலானந்தரைத் தலைவராகக் கொண்ட இச்சங்கத்தின் செயலாளராகக் கணேஷ் விளங்கினார். இவர் தீண்டத்தகாதவன் (முல்க்ராஜின் ஆங்கிலப் புதினம் Untouchables (1947) , குங்குமப்பூ (1956, கே. ஏ. அப்பாசின் புதினம்), அஜந்தா (கே. ஏ. அப்பாசின் புதினம்), ஹோசிமின் கவிதைகள் (1964), லூசுன் சிறுகதைகள் போன்ற நூல்களை மொழிபெயர்ப்புச் செய்தார்,

இவரின் பணிகளுக்காக இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளதோடு, இலக்கியச் செம்மல் (1991), கலாபூஷணம் விருது (1995), இருமுறை விபவியின் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருதுகள் , கனடாவின் 'இலக்கியத் தோட்டத்தின்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 74-75
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 83-88
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 69
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 43-44
  • நூலக எண்: 2046 பக்கங்கள் 12-27
  • நூலக எண்: 2065 பக்கங்கள் 49-50