ஆளுமை:சிங்கராஜா, இராணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராணி
தந்தை சிங்கராஜா
தாய் உத்திரியம்
பிறப்பு 1954.06.27
ஊர் மன்னார்
வகை சமூகசேவையாளர், பெண்ணியவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சிங்கராஜா, இராணி (1954.06.17) மன்னார் விடத்தல்தீவில் பிறந்த சமூகசேவையாளர், இவரது தந்தை சிங்கராஜா; தாய் உத்திரியம். இவரது தந்தையின் வேலை காரணமாக ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஹட்டன் சென் கேப்ரியல் கொன்வன்டில் கல்வி கற்றவர். இவரின் சமூகசேவைக்கான பிரவேசம் JCYO எனும் இளைஞர் குழுவில் சேர்ந்து செயற்பட்டமையேயாகும். அதனைத் தொடர்ந்து மலையக மறுமலர்ச்சி மன்றத்தில் தையல் கற்பதற்காகச் சென்றவர் பின்னர் மலையக மறுமலர்ச்சி மன்றத்தின் வேண்டுகோளுக்கு இணங்க மலையகத் தோட்டங்களில் உள்ள யுவதிகளுக்கு தையல் கற்பிப்பதற்காகச் சென்றார். இதன் ஊடாக மலையக பெண்களின் துயரங்களை ஆழமாக அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்ததாகத் தெரிவிக்கிறார் இராணி. தொடர்ந்து அந்நிறுவனத்தில் இணைந்து ஹட்டன், மஸ்கெலியா, வட்டவளை,நாவலப்பிட்டி பிரதேசத்தில் மலையக மக்கள் மத்தியில் 1983ஆம் ஆண்டு ஆண்டு வரை திட்ட இணைப்பாளாக செயற்பட்டுள்ளார். 1983ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தின் பின்னர் இந்நிறுவனம் மூடப்பட்டதைத் தொடர்ந்து ஹட்டன் நெஷனல் வங்கியில் 1987ஆம் ஆண்டு இணைந்து கடமை புரிந்துள்ளார். 1987ஆம் ஆண்டு மீண்டும் PALM எனும் நிறுவனத்துடன் இணைந்து 1994ஆம் ஆண்டு வரை திட்ட இணைப்பாளராக நுவரெலியா, தலவாக்கலை, அக்கரபத்தன, உடபுசல்லாவ பிரதேசங்களில் உள்ள தோட்டங்களில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இக்காலகட்டங்களில் அவருக்கென சொந்த வீடொன்றைக் கட்டியதுடன் அவர் சிறு வயதிலிருந்து சேர்த்த புத்தகங்களைக் கொண்டு 1983ஆம் ஆண்டிலிருந்து ஒரு நூலகத்தை நடாத்தி வந்திருந்தார் அவற்றைப் பயன்படுத்தி சொந்தமாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கும் நோக்கில் 1996ஆம் ஆண்டு தனது சொந்த வீட்டை அலுவலகமாகக் கொண்டு SWEAT எனும் நிறுவனத்தை ஆரம்பித்து ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 11 தோட்டங்களில் சமூகப் பணியை ஆற்றிக் கொண்டிருக்கின்றார். 2000ஆம் ஆண்டில் இருந்து வடக்கு கிழக்குப் பகுதிகளிலும் குறிப்பாக மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை போன்ற பகுதிகளில் உள்ள கிராம மக்கள் மத்தியில் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டிலிருந்து SFCG எனும் நிறுவனத்துடன் இணைந்து கிளிநொச்சி, மொனறாகலை, அம்பாறை, மன்னார், மாத்தறை, மாவட்டங்களில் திட்ட இணைப்பாராக செயற்பட்டு சமூகப் பணிகள் மேற்கொண்டுள்ளார். SWEAT நிறுவனத்தின் ஊடாக பாலர் பாடசாலை, பெண்கள் முன்னேற்றத்திற்கான செயற்திட்டங்கள், பயிற்சிகள் வழங்கி 30 பேர் கொண்ட இளைஞர்களை ஐந்து குழுக்களாக வீதி நாடகப் பயிற்சி அளித்து அவர்களின் மூலம் ஹட்டன், நாவலப்பிட்டி, கண்டி, நுவரெலியா, பதுளை மாட்டவங்களில் உள்ள தோட்டப் பகுதிகளில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், மதுபாவனை, வீட்டு வன்முறை, கல்வி சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட நிகழ்வுகளை நடத்தியுள்ளார் இராணி சிங்கராஜா.


குறிப்பு : மேற்படி பதிவு சிங்கராஜா இராணி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.