ஆளுமை:சிவதாசன், சிவநாமம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவதாசன்
தந்தை சிவநாமம்
பிறப்பு 1948.11.04
ஊர் அரியாலை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவதாசன், சிவநாமம் (1948.11.04 - ) யாழ்ப்பாணம், அரியாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர். இவரது தந்தை சிவநாமம். பரம்பரை வழியாக நாடகக் கலையை வளர்த்து வரும் குடும்பவாசியான இவர், ஆரம்பக் கல்வியை யாழ். ஆனந்தா வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ். கனகரத்தினம் (ஸ்ரான்லி கல்லூரியிலும்) மத்திய மகா வித்தியாலயத்திலும் நிறைவு செய்தார்.

பாடசாலைக் காலத்திலிருந்து எழுத்துத்துறையிலும் நாடகத்துறையிலும் ஈடுபாடு கொண்ட இவர், சிறுவர்களுக்கான ஆக்கங்களில் ஈடுபாடு கொண்டார். இவரின் “வேப்ப மரத்தடிப் பேய்” என்னும் சிறுவர் நவீனம் வரதர் வெளியீடாக நூலுருவில் வெளிவந்ததோடு “தங்கமலர் சிறுவர் பாடல்” என்ற நூலையும் வெளியிட்டார். வீரகேசரி வார வெளியீட்டில் இருபத்தைந்து வாரங்கள் வெளிவந்த “அதிசயப்பறவை” என்னும் சிறுவர் நவீனமும் “விஜய்” சிறுவர் வாரப் பத்திரிகையில் “யாழ்ப்பாணச் சரித்திரம்” என்னும் சிறுவர் இலக்கியமும் இவரால் எழுதப் பெற்றவையாகும். இவர் அரியாலை மேற்கு அண்ணமார் ஆலய வரலாறு, அந்தாதி, திருப்பொன்னூஞ்சல் அடங்கிய நூலினையும் வி. கே. இரத்தினத்தின் அரங்கச் செயற்பாடுகள் பற்றி “இசைநாடகக் கவிக்குயில்” என்ற நூலினையும் எழுதியுள்ளார். மேலும் இவரின் “தென் யாழ்ப்பாணம் என்ற நாடக வரலாற்று நூலும் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஆய்வும் கையெழுத்துப் பிரதியாக இருக்கின்றது.

காலத்திற்குக் காலம் உள்நாட்டு, வெளிநாட்டு இதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பண்பாட்டுக் கட்டுரைகள், வரலாற்றுக் கட்டுரைகள் எழுதி வந்துள்ள இவர் அகில இலங்கைச் சமாதான நீதவானுமாவார். கலாபூஷணம் அமரர் வி.கே. இரத்தினம் நூல் வெளியீட்டு விழாவின் போது இவர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். மேலும் இவரின் கலை இலக்கியப் பணியைப் பாராட்டி நல்லூர்ப் பிரதேச கலாச்சாரப் பேரவை இவருக்கு 2008 ஆம் ஆண்டு “கலைஞானச்சுடர்” பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 28
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 19