ஆளுமை:ஜெனிதா, பிரதீபன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜெனிதா பிரதீபன்
தந்தை மார்க்கண்டு மோகன்
தாய் பாலசுந்தரம் பிறேமானந்தினி
பிறப்பு 1982.05.03
ஊர் நற்பிட்டிமுனை, அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


ஜெனிதா பிரதீபன் அவர்கள் 1982 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மத்தியமுகாம் கிராமத்தில் மோகன் மற்றும் பிறேமானந்தினி தம்பதிக்கு மூத்த பிள்ளையாக பிறந்தார். இவர் தற்போது கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட நற்பிட்டிமுனை கிராமத்தை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார்.

இவர் ஆரம்பக் கல்வியை கமு/கமு/சிவசக்தி மகா வித்தியாலயத்தில் கற்றார். அக்காலத்தில் இப்பாடசாலையில் க.பொ. சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேற்றை முதல் மாணவி ஆவார். உயர்கல்வியை கமு/கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலையில் கற்றார். அதில் 3 திறமை சித்திகளைப் பெற்றார். பின் இவர் கிழக்குப் பல்கலைக்கழகம் சென்று அங்கு சமூகவியலில் சிறப்பு கற்கையை முடித்து பட்டதாரியானார். பின் அதே பல்கலைக்கழகத்தில் ஒரு வருடம் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணி புரிந்தார். பல்கலைக்கழக காலத்தில் மேடைப்பேச்சுகள் பலவற்றில் பங்குபற்றினார். அத்தோடு கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றைப் பத்திரிகை மற்றும் சஞ்சிகைகளுக்கு எழுதினார். 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தராக நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமை புரிந்தார்.

இவர் அதனை தொடர்ந்து காரைதீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றினார். அங்கு பெண்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வுகள், சொற்பொழிவுகள் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொண்டார். அதன் பின் கல்முனை பிரதேச செயலகத்தில் (முஸ்லிம் பிரிவு) தற்போது கடமை புரிந்து வருகின்றார். இவர் தற்போது கல்முனை நெற் பத்திரிகையின் மங்கையர் பிரிவு ஆசிரியராக இருக்கின்றார். இதன் மூலம் பெண்கள் வலுவூட்டல், பெண்களுக்குரிய சட்டங்கள், பெண்கள் நலன் சார்ந்த விடயங்களை எழுதி வருகின்றார். மேலும் அகரம் கலை இலக்கிய மன்றத்தின் செயலாளராக பல்வேறு இலக்கிய பணிகளை செய்து வருகின்றார்.

இவர் சமூகவியல் எனும் தலைப்பில் 13 கட்டுரைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகம் ஒன்றை நூலக ஆவணமாக்கல் திணைக்களத்தின் நிதி அனுசரணையால் வெளியிட்டார். இப் படைப்பிற்காக ஜனாதிபதி கையொப்பமிட்ட சான்றிதழும் கிடைத்தது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதற்கான தண்டனைகளும் அடங்கிய கையேடு இரண்டினை வெளியிட்டுள்ளார். துணிந்தெழு சஞ்சிகையின் ஸ்கைப் ஊடக வலையமைப்பின் நூல்களின் வெளியீட்டின் போது கெளரவ அதிதியாக கலந்து நூல் விமர்சனங்களையும் வழங்கியுள்ளார்.

அத்தோடு இவர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பாக தகவல்களை திரட்டுவதுடன் பெண்கள் உரிமைகள், பால்நிலை சமத்துவம் தொடர்பான பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகின்றார். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால உதவிகள் வழங்குவதுடன் உள்வள ஆலோசனைகளையும் வழங்குகின்றார். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், அம்பாறைக்குரிய தமிழ்மொழிக்கான வளவாளராக இருந்து அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், மதத்தலைவர்கள் போன்றோருக்கு நல்லிணக்கம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றார்.

அவ்வப்போது வீரகேசரி, தினகரன், தமிழன், சஞ்சிகைகள், முகப்புத்தகம் போன்றவற்றில் இவர் எழுதி அனுப்பிய கவிதைகள் இடம்பெறுகிறது. இவரின் எழுத்துக்கள் வெளிஉலகிலும் தடம்பதித்துள்ளன. அதாவது, இந்தியாவின் புண்ணை, லண்டன் காற்று வெளி, அவுஸ்ரேலியாவின் உதய சூரியன் போன்றவற்றிலும் இவரது கவிதைகள், சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. அத்தோடு பிறை, கெப்பிடல், டாஸ்சபா போன்ற தொலைக்காட்சி கலந்துரையாடல்களில் பங்குபற்றியுள்ளார். Gafso நிறுவனம் இல்லத்து வழக்காடு எனும் புத்தகத்தை வெளியிடுவதற்குரிய தகவல்களை வழங்கியுள்ளார். இவர் கிழக்குமாகண கலைஞர் சுவதம் விருதையும் பிரதேச ரீதியான பாராட்டுக்களையும், இலங்கையின் வனிதா அபிமான எனும் விருதினை இரண்டு தடவைகள் பெற்றுள்ளார்.