ஆளுமை:தபேந்திரன், வேதநாயகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தபேந்திரன்
தந்தை வேதநாயகம்
தாய் பரிமளகாந்தி
பிறப்பு 1969.04.04
ஊர் யாழ்ப்பாணம், சுண்டுக்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தபேந்திரன், வேதநாயகம் (1969.04.04 - ) யாழ்ப்பாணம், சுண்டுக்குழியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை வேதநாயகம்; தாய் பரிமளகாந்தி. இவர் ஆரம்பக் கல்வியை யாழ் புனிதர் சாள்ஸ் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வணிகமாணி, குடித்தொகை அபிவிருத்திக் கற்கையில் பட்டப்பின் டிப்ளோமா, அபிவிருத்திக் கற்கையில் முதுகலைமாணி ஆகிய பட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அரச கடமையில் சமூகசேவைகள் உத்தியோகத்தராக திருகோணமலையில் 1997 ஆம் ஆண்டில் இணைந்து 4 வருடங்களுக்கு மேலாகக் கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தராகக் கடமையாற்றினார்.

சிறு வயது முதல் வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டுள்ள இவர், 16 வயதில் எழுதிய கவிதை ஈழநாடு நாளிதழில் மறைந்த பாரதப் பிரதமர் அன்னை இந்திராகாந்தியின் நினைவஞ்சலியாக பிரசுரமானது. அதே ஆண்டில் வீரகேசரி வாரமலரில் பல திருடன் ஒருநாள் அகப்படுவான்' என்ற சிறுவர் சிறுகதையொன்றும் பிரசுரமாகியது. தொடர்ந்து முரசொலி உட்பட பல பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இவர் பொது அறிவுத் தகவல்களைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்டு 1992 ஆம் ஆண்டு முதல் போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்குப் பொது அறிவு கற்பிக்க ஆரம்பித்தார். 1996 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 11 நூல்களை இத்துறையில் வெளியிட்டுள்ளார்.

பத்திரிகைகளில் யாழ்ப்பாண நினைவுகள் சார்ந்த கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றில் தேர்ந்தெடுத்த 29 ஆக்கங்களை 2012 ஆம் ஆண்டில் 'பூத்திடும் பனந்தோப்பு' என்னும் பெயரில் நூலாகவும் வெளியிட்டிருந்தார். தொடர்ந்து தினக்குரல் வாரமலரில் 2012, 2013 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண நினைவுகள் என்னும் கட்டுரையை எழுதினார். அவை யாழ்ப்பாண நினைவுகள் பாகம் 01 (2014), பாகம் 2 (2015), பாகம் 3 (2016) என வெளிவந்ததுடன் பாகம் 01, 02 நூல்கள் மறுபிரசுரமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கதே.

இவற்றையும் பார்க்கவும்