ஆளுமை: ஞானகணேசன், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம் ஞானகணேசன்
தந்தை கதிர்காமத்தம்பி சுப்ரமணியம்
தாய் தம்பிமுத்து தையல்நாயகி
பிறப்பு 1907.04.24
இறப்பு 1991.01.09
ஊர் திருக்கோணமலை
வகை நாடக செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை நாடக வளர்ச்சியின் முன்னோடிகள் வரிசையில் சுப்பிரமணியம் ஞானகணேசனும் ஒருவராவார். இவர் திருகோணமலையைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சுப்ரமணியம் மற்றும் தம்பிமுத்து தையல்நாயகி ஆகியோருக்கு மூத்த மகனாக 1907 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 24 ஆம் திகதி திருகோணமலை மண்ணில் பிறந்தார். இவரது பெற்றோர் இருவருமே திருகோணமலை மண்ணை பிறப்பிடமாகவும், பூர்வீகமாகவும் கொண்டவர்கள். இவரை தொடர்ந்து 1909 ஆம் ஆண்டு இவரது தம்பியான முருகையாவும், அவரை தொடர்ந்த 1912 ராஜநாதனும் பிறந்தனர்.

ஞானகணேசன் தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும், மூன்றாம் வகுப்புக்கு பின் திருகோணமலை இந்து கல்லூரியிலும் பயின்றார். அதன் பின்னர் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்றதுடன், சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் கல்வி கற்று கேம்பிரிட்ஜ் சீனியர் வகுப்பில் சித்தி பெற்றார். தனது கல்வியை முடித்துக் கொண்டு பாணந்துறை புகையிரத நிலைய உப அதிபராக பதவியேற்று, பணியாற்றிய பின்னர் சிறிது காலம் திருகோணமலை கச்சேரியிலும் எழுதுவினைஞராகவும் கடமை புரிந்து ஓய்வு பெற்றார். கூட்டுறவு சமாஜத்திலும் எழுதுவினைஞராக கடமை புரிந்தார்.

உப்புக் கணக்காளர் சுவாமிநாதனின் மகளான மகேஸ்வரியை திருமணம் முடித்து 5 பிள்ளைகளை பெற்றார். அவர்கள் சுப்பிரமணியம், தர்ம சம்பர்த்தினி, சீமந்தனி, தையல்நாயகி, சுவாமிநாதன் ஆவார்கள். இவரது தாயார் தையல்நாயகி ஒரு சமூக சேவகி என்பதுடன், இலக்கியவாதியாகவும், பத்திரிகை வெளியிடுவதில் ஆர்வமுடையவராகவும் இருந்த காரணத்தினால், இவருக்கு இயல்பாகவே கலைஞானம் இருந்தது. இவர் மோர்சிங் வாசிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததுடன், பல நாடகங்களிலும் நடித்திருந்தார்.

இவரது நாடக ஆர்வம் காரணமாக இந்திய நாடக கம்பனிகளை திருகோணமலைக்கு அழைத்து நாடகங்களை மேடை ஏற்றி உள்ளார். இவரது இந்த ஆர்வத்திற்கு உறுதுணையாக இருந்தவர்கள், த. பாலசுப்ரமணியம், சிவகுரு ஆகியோர் ஆவார்கள். இந்தியாவிலிருந்து கொண்டுவரும் நாடகங்கள் அனைத்தும் சுண்டங்காட்டு பகுதியைச் சேர்ந்த அண்ணாவின் தம்பிமுத்து அவர்களின் நாடக கொட்டகையில் மேடை ஏற்றப்பட்டன. திருகோணமலையில் நாடகத்திற்கு என்று தனி கொட்டகை அமைத்த பெருமை அண்ணாவின் தம்பிமுத்து அவர்களையே சாரும். கிட்டப்பா, அரங்கநாயகி, சுந்தரிபாய், பி. எஸ். ஞானம், கே. காந்திமதிபாய் போன்ற பிரபல நாடக நடிகர்கள் இந்த நாடகங்களில் பங்கு கொண்டுள்ளனர். இவ்வாறு சென்று கொண்டிருந்த பொழுது அண்ணாவி தம்பிமுத்து அவர்களுக்கும், ஞானகணேசன் அவர்களுக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணத்தினால் ஞானகணேசன் தந்தையின் காணியில் ஒரு நாடக மண்டபம் அமைத்து, "மணி தியேட்டர்" என்ற பெயரில் நாடகங்களை அந்த நாடக மேடையில் அரங்கேற்றினார். இவர் பிரபல சினிமா நட்சத்திரங்களான கே. L. V. வசந்தா, கே. T. ருக்மணி, எம். எஸ். எஸ். பாக்கியம், எம். ஆர். சந்தனலட்சுமி ஆகியோரை வைத்து தியேட்டர் மேடைகளில் நாடகங்களை நடிக்கச் செய்தார்.

1940 ஆம் ஆண்டில் மணி தியேட்டர் கட்டப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பின் 1944 ஆம் ஆண்டளவில் வெலிங்டன் தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டது. 1933 தொடக்கம் 1946 ஆம் ஆண்டு வரை இந்திய நடிகர்களை கொண்டு நாடகங்களை மேடை ஏற்றியதன் மூலம் அடைந்த பலன் தனக்கென்று இருந்த ஏராளமான காணிகளை விற்று நஷ்டம் அடைந்தமையே ஆகும். 1948 ஆம் ஆண்டு வரை மணி தியேட்டர் பின் ஜோதி தியேட்டராக மாறி இன்று சிகாரா தியேட்டராக திகழ்கின்றது.

சுப்பிரமணியம் ஞானகணேசன் அவர்கள் 09.01.1991 இறைவனடி சேர்ந்தார்.