நிறுவனம்ːகிளி/வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வட்டக்கச்சி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் மாயவனூர்,வட்டக்கச்சி
முகவரி மாயவனூர், கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

1953 ஆம் ஆண்டு தொடங்கிய கிளிநொச்சியிலிருந்து சுமார் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் வட்டக்கச்சி என்னும் கிராமம் குடியேற்றப்பட்டது. அங்கு மாயவன் ஊர் கிராம சேவகர் பிரிவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், தலவிருட்சம் ஆகிய சிறப்புகளோடு இலங்கையின் திருவரங்கம் எனப் போற்றப்படும் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் சிறப்புற அமைந்துள்ளது.

இவ் ஆலயம் 1955 ஆம் ஆண்டு யாழ் திருநெல்வேலி விவசாய பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்களுக்கு படித்த வாலிபர் திட்டம் என்ற திட்டத்தில் வளவு இரண்டு ஏக்கர், வயல் காணி மூன்று ஏக்கரும் மொத்தமாக 5 ஏக்கர் வழங்கப்பட்டது. இவர்கள் தங்கள் காணிகளை சீர்செய்யும் போது இவர்களின் மனதில் ஒரு குறை இருந்தது. நாம் புதிய இடத்தில் நமக்கெல்லாம் வாழ்விடம் அமைத்து விட்டோம் ஆனால் நம்மை எல்லாம் படைத்து காத்து அருளும் பரம்பொருளுக்கு ஒரு ஆலயம் அமைக்க வில்லையே என்பதுதான் அவர்களது குறையாகும். இதைப் பற்றி பலரும் பல தடவை பேசினாலும் ஆலயம் எங்கே அமைப்பது எந்த மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்வது என்ற குழப்பம் அவர்களுடைய மனதில் ஏற்பட்டது. பழைய வட்டக்கச்சியில் வசிக்கும் உடையார் பரம்பரையினர் குளக்கரை பகுதியில் உள்ள மருத மரத்தடியில் தங்கள் மூதாதையர் வந்து வழிபட்டு செல்லும் வழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று கூறினர். இப்பகுதியில் நீல நிறப் பூக்களுடன் கூடிய துளசி செடியினம் நிறைய உள்ளதாலும் குளிர்ச்சி பொருந்திய இடமாக இருப்பதாலும் கண்ணனையே பிரதிஷ்டை செய்து வழிபடுவதாக தீர்மானிக்கப்பட்டது.

1981ஆம் ஆண்டு சிறு மடாலயத்தை அமைத்து கும்பாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து பல திருப்பணிகள் இடம்பெற்று 2002 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது. ஆலயத்தில் கர்ப்பக்கிரகம் 45 அடி உயரத்தில் கருங்கற்களால் அமைக்கப்பெற்று ஸ்ரீதேவி பூமிதேவியோடு ஸ்ரீ ரங்கநாத பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கிய பிரம்மாண்டமான அனந்தசயன மூர்த்தி மகாலட்சுமியுடன் அருள்பாலிக்கின்றார். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக விநாயகர், லட்சுமி, ஆஞ்சநேயர் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாலயத்தில் பிரம்மோற்சவம் 12 நாள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை தேராக கொண்டு மறுநாள் தீர்த்தமும் பூங்காவனத் திருவிழாவும் ஆஞ்சநேயர் உற்சவமும் இடம்பெறுகிறது. அதேபோல் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை உற்சவமும் வைகுண்ட ஏகாதசி விரதமும் விமரிசையாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெறுகின்றது. வரலட்சுமி விரத விழாவும் நூற்றுக்கணக்கான சுமங்கலிகள் பங்கு பற்றி பயனடையும் வண்ணம் நடைபெற்றுவருகின்றது. ஞாயிறு தோறும் உற்சவம் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதன் போது அபிஷேகம், அலங்காரம், பூஜை வழிபாடுகள், சுவாமி புறப்பாடு, நாமசங்கீர்த்தனம், பகவத் கீதை, ஸ்லோகம், கிருஷ்ண பிரசாதம் வழங்குதல் என்பன சிறப்புடன் நடைபெற்று வருகிறது. ஆலயத்தில் பல திருப்பணிகள் நடைபெற்று மீண்டுமொரு கும்பாபிஷேகத்தை காண்பதற்கு தயாராகி வருகிறது .