நிறுவனம்:அம்/ கமு/கமு/ அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமு/கமு/ அல்-மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் மருதமுனை
முகவரி மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதி, அம்பாறை
தொலைபேசி +94 67 00 00 000
மின்னஞ்சல் almanar1911@yahoo.com, almanar1911@gmail.com
வலைத்தளம் www.kmalmanarcc.lk


அல் மனார் மத்திய கல்லூரி என்பது இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் மருதமுனை கிராமத்தில் மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ளது. இது 1991 இல் நிறுவப்பட்ட மருதமுனையில் உள்ள பழைய பாடசாலைகளில் ஒன்று ஆகும். இப்பாடசாலை 1910 ஆம் ஆண்டு கிராமப் பாடசாலைச் சட்டத்தின்கீழ் ஆரம்பிக்கப்பட்டது. 1911 இல் இப் பாடசாலைக்கான காணி நன்கொடையாக பெறப்பட்டு, அவ்வாண்டிலேயே தனது கல்விப்பணிக்கான முதல் அடியினை எடுத்து வைத்தது.

1912 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தனது பெயரைப் பதிவு செய்து கொண்டது. அல்-மனார் என்ற அரபிப் பதத்திற்கு கலங்கரை என்பது பொருளாகும். கல்வியைத் தேடும் கண்களுக்குக் கலங்கரையாக விளங்கும் இப்பாடசாலை அகில இலங்கை ரீதியில் கல்விசார் துறையிலும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலும் முன்னணி வகித்து வருகின்றது. 1911 ஆம் ஆண்டு இப்பாடசாலையானது ஆண்கள் பாடசாலையாகவும் 1920 ஆம் ஆண்டு அரச தமிழ் கலவன் பாடசாலையாகவும் இருந்தது. ஆனாலும் பெண்கள் 1930 ஆம் ஆண்டளவிலே இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

1953.06.24 இல் மீண்டும் அரச ஆண் பாடசாலை எனப் பெயர் மாற்றப்பட்டு குறித்த காலத்துக்குள்ளேயே மருதமுனை வடக்கு அரசினர் பாடசாலை எனப் பெயர்மாற்றப்பட்டது. 1958.09.26 ஆம் ஆண்டில் முஸ்லிம் வித்தியாலயமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 01.09.1958 இல் அரசினர் முஸ்லிம் என்ற பெயருடன் ஆரம்பிக்கப்பட்டு 1970 ஆம் ஆண்டு அல்-ஹிறா மகாவித்தியாலயம் எனப் பெயர்மாற்றப்பட்ட பாடசாலையானது முஸ்லிம் வித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டே மருதமுனை அல்-மனார் மகா வித்தியாலயமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் 2022.01.17 அன்று தேசிய பாடசாலையாக உத்தியோக பூர்வமாக தரமுயர்த்தப்பட்டது.

1911 ஆம் ஆண்டுகளில் 1ம், 2ம் வகுப்புக்களுடனும் 50 மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலை அகில இலங்கை ரீதியான தனது கல்விசார், இணைப்பாடவிதானம் சார் சாதனைகளினால் பல பிரதேச மக்களது கவனத்தை ஈர்த்தது. இன்று 1AB தரப் பாடசாலையாக பல பிரதேச மாணவர்களையும் உள்ளடக்கிய 2350 இற்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக மிளிர்கின்றது. ஆரம்ப கால அதிபர்களாக 1912-1914 வரை P. சின்னையா அவர்களும் 1914 – 1920 வரை J. S. வேலுப்பிள்ளை அவர்களும் 1921-1935 வரை K. S. வைரமுத்து அவர்களும் மருதமுனை அல்-மனார் மகாவித்தியாலயமாக மாற்றப்பட்ட போது அதிபராக A. H. மொஹமட் அவர்கள் 1969-1976 வரை கடமையாற்றினார்கள். தற்போது அதிபராக இப்றாலெப்பை உபைதுல்லாஹ் கடமையாற்றுகின்றார்.

ஆரம்ப காலகட்டங்களில் 1927 – 1931 வரை VSSC பரீட்சை முறையும், 1931 – 1944 வரை SSC, JSC பரீட்சை முறையும், 1927 – 1935 வரை மாணவ உபாத்தியாயர் பரீட்சையும், 1935 – 1938 வரை KSC பரீட்சையும், 1938 – 1943 வரை JSC பரீட்சையும், 1978ம் ஆண்டு G.C.E (O'Level) வரைக்குமான பரீட்சையும், 1980 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை G.C.E (A' Level) வரைக்குமான உயர்கல்வியை இப்பாடசாலை கொண்டுள்ளது. 1941 ஆம் ஆண்டிலேயே அல்-ஹாஜ் S. Z. M. மசூர் மௌலானா, ஓய்வுபெற்ற கல்விப்பணிப்பாளர் M. A. M. மஜீத் ஆகிய இருவரும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தனர்.

மேலும், 1946 - 5 பேரும் 1948 - ஒருவரும் 1949 - ஒருவரும் என அக்காலகட்டங்களிலே இப்பாடசாலை தனது புலமையை வெளிப்படுத்தியுள்ளது. 1978 ஆம் ஆண்டு தொடக்கம் க.பொ.த. (சா.த) பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்று இப்பாடசாலை 1999 இல் இப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 85.5% ஆன மாணவர்கள் உயர்தரம் கற்பதற்குத் தகைமை பெற்று மாகாண மட்டத்தில் முதன்மை பெற்றதுடன் ஆளுநர் விருதையும் பெற்றுக்கொண்டது.

1980 ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தர)ப் பரீட்சைக்கு 11 மாணவர்களை முதன்முறையாக அனுப்பிய இப்பாடசாலையானது ‌வைத்தியர், பொறியியலாளர், விஞ்ஞான, முகாமைத்துவ, வர்த்தக, கலைப்பட்டதாரிகளும், இன்னும் பல துறைகளிலும் பல்க‌‌லைக்கழகம் சென்றோரும் 1500 க்கும் மேல். 2004 ஆம் ஆண்டு உயர்தர கலைப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலையைப் பெற்று C. W. W. கன்னங்கரா விருது பெற்றவரும் இப்பாடசாலை மாணவரொருவரேயாகும்.

இப் பாடசாலையால் வெளியிடப்பட்ட ஆவணங்களாக 1968 ஆம் ஆண்டு கலங்கரை எனும் ஆண்டு நிறைவு மலரும் 2003 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் A. H. M. மஜீத் அவர்களுக்காக இமயம் எனும் சேவை நலன் பாராட்டு மலரும் முன்னாள் அதிபர் A. L. மீரா முகையதீன் அவர்களுக்காக பசுமை எனும் சேவை நலன் பாராட்டு மலரும் 2001 முதல் இன்று வரை புலமை எனும் வெளியீடும் 2007 ஆம் ஆண்டு சிறப்பு வெளியீடாக கலங்கரை எனும் மலரும் 2007 முதல் இன்று வரை A/L தின விஷேட மலரும், O/L தின விஷேட மலரும், ஜீனியஸ் எனும் தரம் 9 இற்குரிய சஞ்சிகையும் 2010 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் S. L. A. றஹீம் அவர்களுக்காக செழுமை எனும் சேவைநலன் பாராட்டு மலரும் வெளியிடப்பட்டுள்ளது.