நிறுவனம்:கும்புறுபிட்டி விநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கும்புறுபிட்டி விநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் அன்புவளிபுரம்
முகவரி கும்புறுபிட்டி விநாயகர் கோவில், கும்புறுபிட்டி, திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

திருக்கோணமலை நகரத்திலிருந்து இருபத்திரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் கட்டுக்குளம்பற்றிலுள்ள சைவக் கிராமம் கும்புறுபிட்டி. கிழக்கே கடலாலும், மேற்கே வேலப்ப மலையாலும், வயல்களாலும், சூழப்பட்டுச் சலப்பை ஆற்றுக்கும், இறக்கக்கண்டி ஆற்றுக்கும் இடைப்பட்டபகுதி கும்புறுபிட்டி எனப்படுகின்றது. தென்னஞ்சோலைகளாலும், வயல்களாலும் இயற்கையழகு பெற்றுவிளங்கும் இந்தக் கிராமத்தின் மத்தியில் விநாயகராலயம் காணப்படுகின்றது.

இந்தக் கிராமத்திற்கு மேற்கே நான்கு கிலோ மீற்றர் தூரத்தில் வேலப்ப மலை இருக்கின்றது. வேலப்ப மலையில் பன்னெடுங் காலத்திற்கு முன் பெரிய ஆலயமொன்றிருந்து அழித்துவிட்டதற்குரிய அடையாளங்கள் காணப்படுகின்றன. இங்கு வாழும் முதியவர்களும் இவ்வாலயத்தைப் பற்றிச் செவிவழிச் செய்தியாகத் தாம் அறிந்தவற்றைக் கூறுகின்றார்கள். சுமார் நூற்றியைம்பது வருடங்களுக்கு முன் வேலப்ப மலையிலிருந்து கொண்டு வரப்பட்ட விநாயகர் விக்கிரகமே இந்தக் கோவிலில் இருப்பதாகக் கூறுகின்றார்கள். வேலப்ப மலையிலிருந்து கிடைத்த முத்துக்குமாரனுடைய தாயீர விக்கிரகமொன்று இங்குள்ள கண்ணகையம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருக்கின்றது. இப்பிரதேசம் பண்டைக்காலத்தில் "குமரபுரம்" என வழங்கி வந்திருக்கின்றது. வேலன் எழுந்தருளியிருந்த மலை வேலப்பமலையென்றும், அங்கு கோவில் கொண்டிருந்த முத்துக் குமரனுடைய பெயரைத் தாங்கி இவ்வூர் "குமரபுரம்" என வழங்கி வத்திருப்பதும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் பெரு விருந்தாகயமைகின்றது.

இத்தகைய சிறப்புக்களோடு விளங்கிய பழமைமிக்க சைவக்கிராமத்தில் இன்று இருக்கும் விநாயகர் சிறிய மடாலயமாக இருந்து சற்று பெரிதாக அமைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் குமரபுரச் சைவமக்களின் வழிபாட்டுத் தலமாயிருந்த வேலப்ப மலைக் கோவிலானது இயற்கை எதுக்களினாலோ, வேறு எக்காரணத்தினாவோ அழிவுற்றிருக்கலாம். நெடுங்காலத்திற்குப் பின் இற்றைக்குச் சுமார் நூற்றைம்பது வருடங்களுக்கு முன் வேலப்ப மலையிலிருந்த பிள்ளையாரைக் கொண்டு வந்து ஒரு மரத்தடியில் வைத்து வழிபட்டு வந்தார்கள். பின்னரும் அது பராபரிப்பிழந்து புற்று வளர்ந்து மூடிக் கொண்டது. இந்தப் பிள்ளையாரின் வரலாற்றையறித்த இவ்வூர் பெருமனுசன் திரு. சின்னத்தம்பி கனகசபை வைத்தியர் என்பவர் புற்றை அகழ்ந்து பிள்ளையாரை எடுத்துச் சிறு கொட்டில் கோவில் கட்டி அதில் வைத்துத் தானே பூசை செய்து வழிபட்டு வந்தார். அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாத தால் பொன்னம்மாளும், அவருக்குப்பின் கண்ணகைப்பிள்ளையும் அவருடைய கணவன் திரு. விஸ்வலிங்கம் என்பவர்களும் ஆலயத்தைப் பராபரித்து வந்தார்கள். திரு. விஸ்வலிங்கம் என்பவர் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபங்களைக் கொண்ட கற்கோவிலாகக் கட்டினார். திரு. வி. சுப்பிரமணியம் என்பவரும் அவருடைய சகோதரர்களும் ஆலயத்தைப் பராபரித்து வருகின்றர்கள். இவர்கள் இவ்வாலயத்திற்கு அழகிய மணிக்கோபுரம் கட்டியிருக்கின்றனர்.கருவறையில் இரண்டரையடி உயரமான பிள்ளையார் நிலையும், வைரவர் சூலமும்,வேலும் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு நாளைக்கு ஒரு தரம் நித்தியபூசையும், மாத சதுர்த்தி, பிள்ளையார் கதை, திருவெம்பாவை, சித்திராபூரனை முதலிய விசேட பூசைகளும் நடைபெற்று வருகின்றன. தற்சமயம் பூஜைகளுடன், சிறப்பாக ஆலயம் பராமரிக்கப்பட்டு வருகின்றது.