நிறுவனம்:திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி திருகோணமலை அருள்மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி கோவில், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


கிழக்கிலங்கையில் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது திருக்கோணேசர் ஆலயம், சிவனுக்கோர் திருத்தலமாக இவ்வாலயம் மிளிர்வதைப் போல சக்திக்கோர் திருத்தலமாய் திகழ்வதே திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில், இவ்வரிசையில் முருகனுக்கோர் திருத்தலமாக இவ்வாலயங்களைச் சூழ்ந்தாற் போல் அமைந்து பழம்பெரும் கோயிலாக விளங்குவது வில்லூன்றிக் கந்தசுவாமி கோயிலாகும். சோழச் சிற்ப முறையில் இவ்வாலயத் திருவுருவங்கள் அமைந்திருப்பது அதன் பழமையினைப் பிரதிபலிப்பதும், பஞ்சலோகத்திலான ஆலய மூலவிக்கிரகமே உற்சவ காலங்களில் வீதி உலா வந்து அருள்பாலிப்பதும் இத்தலத்திற்கே உரித்தான தனித்தன்மை மிக்க அம்சமாகும்.

இவற்றுக்கு மேலாக சைவ உலகின் எப்பாகத்திலும் காணப்படாத நடைமுறையொன்று இங்கு பின்பற்றப்படுகின்றது. அதாவது சைவக் கோவில்களில் மூலமூர்த்தியாக விளங்குவது சிலை விக்கிரகமே (கற்களாலான சிற்பம்). ஆனால் இக்கோவிலில் மாத்திரமே பஞ்சலோகத்தில் உருவான வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகப் பெருமானே மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள் பாலிக்கின்றார்.

இன்றைக்கு பல நூற்றாண்டுகள் இத்தலம் பழமை வாய்ந்ததைப் போல் அதே ஆகம சாஸ்திர விதிப்படியே தினமும் பூசைகள், திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இத்தலத்தின் வரலாறானது, தமிழ்நாடு திருவேரகத்தில் வாழ்ந்து வந்த சிவசுப்பிரமணிய சர்மா என்பவர் தான் வணங்குவதற்கென குமாரநாத சிற்பியை கொண்டு பஞ்சலோகத்தினால் சண்முகநாதப் பெருமானை உருவாக்கினார். இதனால் கருணையுற்ற பெருமான் சிவசுப்பிரமணிய சர்மாவுக்கு சாயுச்சிய பதவியை அருளவே கலக்கமுற்று சுற்றத்தோர் இத்திருவுருவத்தை சிதைத்து விட எண்ணினர்.

இதன் விளைவால் சண்முகப் பெருமான் தமக்கென ஓர் தலத்தை தேடிப் புறப்பட்டவர் போல் சிற்பியின் கனவிற் தோன்றி என்னை இலங்கைக்கு செல்லும் கப்பலில் ஓர் பேழைக்குள் வைத்து அனுப்பி விடு என்று சொல்லவே சிற்பியும் அவ்வாறே செய்தார். இதன் பின் இச் சண்முகப் பெருமானின் திருவுருவம் திருகோணமலை "முடமாண்டான்" என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டதிற்கு இரண்டு வித வரலாறுகள் உள்ளன. ஒன்று இலங்கையின் கிழக்குத் திசைநோக்கி வந்து கொண்டிருந்த கப்பல் காற்று இல்லாமையினால் நின்றதாகவும், பின் மாலுமியின் கனவில் தோன்றிய சண்முகப் பெருமான் தான் வந்த பேழையை கடலில் வீசிவிடக் கூறியதாகவும், அம் மாலுமி அப்படியே செய்ய கப்பலும் நகர்ந்ததாகவும், சில காலங்களின் பின் வலையில் பேழை ஒன்று வந்ததாகவும், காலங் காலமாய் ஓர் பூர்வீக வரலாறு உண்டு.

இன்னுமொரு வரலாறானது பழைய ஓர் ஆவணத்தின்படி ஒல்லாந்தர் (காலத்தில் 1762) இத் திருவுருவங்கள் வந்த பேழையைத் திருகோணமலைக்கு அருகாமையில் வந்த பாய்க்கப்பல் ஒன்று காற்றில்லாமல் நின்றதாகவும், அப்போது சுவான் சம்மட்டியர் சவரியப்பரும், அவரது மகனும் படகொன்றில் போய் அரிசி ஏற்றுமதி பண்ணி வந்தபோது அக்கப்பலுக்கு சமீபமாக வந்ததாகவும், அப்பொழுது அந்த கப்பற்காரர்கள் அவர்களை சைகைகாட்டி அழைத்து இவ்வூரின் பெயரை வினவியதாகவும், இவ்வூரின் பெயர் திருகோணமலை என்று கூறியவுடன் வடதேசத்தவர்களில் ஒருவர் இப்பெட்டியை திருகோணமலையில் இருக்கும் யாரிடமாவது கொடுக்கும்படி சொன்னதாக் கூறி இப்பெட்டியை இவர்களிடம் கொடுத்ததாகவும் குறிக்கப்பட்டுள்ளது. பின் அவர்கள் கரைக்குச் சென்று அப்பெட்டியை உடைத்துப் பார்க்கும்போது பஞ்சலோகத்தினாலான ஆறுமுகமுடைய கந்தசுவாமியாரும், இரண்டு அம்மன்களும், வேலாயுதம் ஒன்றும், ஓர் பார்கவதப் பொல்லும், சிவ பூசைச் சாமான்களும் பணமாய் எழுபத்தைந்து இறைசாலும் அப்பெட்டியில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதன் பின் அவ்வூர்க் குருகுலப் பகுதியினரின் அக்காலத்தில் இருந்த சீவலை முதலித்தம்பி எனும் வெள்ளாளப்பிரபுக்கும், ஊர்மணியமாய் இருந்த ஸ்ரீ. வே. ம. கதிர்காமர் மணியம் அவர்களுக்கும் அறிவித்து அவர் ஊரவர்கள் எல்லோரையும் அழைத்து ஓர் கூட்டம் வைத்து முடமாண்டான் என்னும் இடத்தில் மகாராஜா மலைக்குச் சமீபமாக சித்திரை மாதம் (சுபானு வருடம் ) 1763ம் ஆண்டு அத்திவாரம் இட்டு ஸ்தூபி, மண்டபம், தீர்த்தக் கிணறு ஆகியவற்றைக் கட்டி ஆவணி மாதம் (சர்வசித்து வருடம் கலியுகம் (4867) 1765 பார்த்தீப வருடத்தில்) கும்பாபிஷேகம் இந்தியாவில் இருந்து வந்த ஸ்ரீபரசுராம ஐயரால் நிறைவேற்றப்பட்டது.

நித்திய பூசைகள் கிரமமாய் நடைபெற்று வந்தன. ஆவணி மாதத்தில் திருவிழா கொண்டாடப்பட்டது. சுவாமி தீர்த்தம் ஆட அருகே இருந்த ஒரு சிறிய குளம் தூர்வாரி தீர்த்தக்குளமாக்கப்பட்டது. பின் வே. ம. கதிர்காமமணியம் மூப்படைந்ததால் கோயில் கருமங்களை கொண்டு நடாத்துவதற்கு சுவான் சம்மட்டியாரின் மகன் சவரியப்பர் நியமிக்கப்பட்டார். ஸ்ரீ. வே. ம. கதிர்காமமணியம் இறைவனடி சேர அவரது மகன் க. ம. வேலப்பர் ஊர்மணியமாக பட்டங் கட்டப்பட்டார். பின் 1782ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் யுத்தக் கப்பல்கள் இவ்வூரைத் தாக்கியதால் மக்கள் சிறிது காலம் சிதறி ஓடி அண்டியுள்ள கிராமங்களில் வசித்தார்கள். அமைதி திரும்பியவுடன் தங்கள் இடத்துக்கு வந்து வழமைபோல் காரியங்கள் நடைபெற்றது. ஸ்ரீ சவரியப்பன் மூப்படைந்த காரணத்தால் தனது சகோதரனின் மகன் ஸ்ரீ பெரிய ஆனந்தரை இக்கோயிலை நிர்வாகம் செய்ய எல்லோருடைய சம்மதத்துடன் நியமித்தார். திரும்பவும் 1782ல் ஆங்கிலேயர் இவ்வூரைத் தாக்க இக்கோயிலும் அழிந்துவிட ஸ்ரீ பெரிய ஆனந்தரும் காயமுற்றுப் பின் சிவபதமடைந்தார். ஸ்ரீ பெரிய ஆனந்தரின் மகன் ஆனந்தர் விளாசித்தம்பியும், ஊர்மணியம் க. ம. வேலப்பரும் (கதிர்காம மணியத்தின் மகன்) பலரும் இத் திருவுருவத்தை ஓர் பெட்டியில் வைத்து பூட்டித் தம்பலகாமம் திருக்கோணேசர் ஆலயத்தில் பாதுகாப்பாக வைத்தார்கள். சில காலத்திற்கு பின் இம் மூர்த்தியைத் தம்பலகாமம் கோணேசர் ஆலயத்தில் பிரதிஸ்டை செய்ய எத்தனித்தும் மூன்று முறையும் தடைப்பட்டது. சில காலம் சென்ற பின் மேற்குறிப்பிட்ட ஸ்ரீ. க. ம. வேலப்பருடைய சொப்பனத்தில் முருகன் தோன்றி தன்னை வில்லூன்றி என்னுமிடத்தில் பிரதிஸ்டை செய்யுமாறு கூறியதாகவும், அவ்வாறே ஸ்ரீ. க. ம. வேலப்பரும், சிவலை முதலித்தம்பியும் சில கரையூரவர்களும் மேற்படி விக்கிரகத்தை வில்லூன்றி என்னுமிடத்தில் உள்ள விக்னேஸ்வரர் ஆலயத்தில் வைப்பதாகத் தீர்மானித்து வில்லூன்றியிலேயே வைரவநாத குருக்கள் சுப்பையர் பொருட்டு பாலப்பசெட்டியார் கட்டுவித்த விக்னேஸ்வர ஆலயத்தில் வைத்தார்கள்.

அந்த ஆலயத்தை பின்னும் சில காலம் சென்ற பின்னர் விஸ்தீரணமாகக்கட்டி இந்த மூர்த்தியை தானே பிரதான மூர்த்தியாக அதிலமைக்கக் கருதி அதற்கு வேண்டிய நிலத்தை 1809ம் ஆண்டு தை மாதம் 5ம் திகதி இராமநாத ஐயர், சிந்தாமணி ஐயர், வைரநாத குருக்கள், முத்தையா சுப்பையா, நாராயண விஸ்வநாத பட்டர் என்னும் நான்கு பிராமணர்களும் தர்ம சாசனம் செய்து கொடுத்தார்கள். இத்தரும சாசனத்தின்படி இப் பிராமணர்கள் நான்கு பேருடைய ஆண் வம்சத்திற்கு இக்கோயில் பூசை உரித்து உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

சாலிவாகனசகம் (1734) கலியுகம் (4911) பிரசோற்பத்தி வருடம் தை மாதம் 5ம் திகதி முகூர்த்தத்தில் அஸ்திவாரமிடப்பட்டு மூலஸ்தானம், கர்ப்பக்கிரகம் முதலான 3 மண்டபங்களும், 2 மண்டபங்கள் ஓட்டால் வேய்ந்தும், ஒன்று ஓலையால் வேய்ந்தும், களஞ்சிய வீடும், கிணறு, யாகசாலை, சுற்று மதிற் சுவர் யாவும் கட்டிமுடித்து வெளிவீதியில் ஒரு கேணியும் வெட்டுவித்து க. ம. வேலப்பர் மணியமும், திருகோணமலை 2ம் நம்பரில் இருக்கும் கரையூரவர்களுமாய் முடிப்பித்தார்கள்.

கும்பாபிஷேகத்திற்காக முகூர்த்தம் நியமித்து கலியுக 4914ல் ஸ்ரீமுக வருசத்தில் ஆவணி மாதம் கி. பி.1813 கும்பாபிஷேகம் நிறைவேற்றப்பட்டது. அக்காலம் முதலாக நித்திய பூசை உற்சவம் முதலான வழிபாடுகள் யாவும் கிரமமாய் நடந்து வந்தன. ஸ்தம்ப மண்டபம் வயிரவநாத வன்னித்தம்பியும், விழா மண்டபம் சின்னக்குட்டிப்பிள்ளையும், மகா மண்டபம் முத்தையராலும், பிறர் பொருளாலும் கட்டுவித்து பின் சுவாமிநாத வன்னிபமும், மதில் முழுவதும் கதிரவேலு முதலியாருடைய பொறுப்பில் கட்டுவித்து, வாகனசாலை சிற்றம்பலம் சுப்பிரமணியரும், வயிரவநாத சின்னக்குட்டியரும் கட்டுவித்தனர். பிள்ளையார் கோவில் மூத்ததம்பியார் கட்டுவித்தது. தண்டாயுதபாணி கோவில் ஐயம்பிள்ளையாலும் பிறருடைய செலவிலும் கட்டப்பட்டது. நாகதம்பிரான் கோவிலும் மணிக்கோபுரமும் வைரவநாதர் சின்னக்குட்டியாரின் முயற்சியில் கட்டுவித்தது. கோபுரவாசல் தருமரும் சண்முகப்பிள்ளையும் கட்டுவித்தது வைரவர் கோவில் பராமரிப்புக்காரன் மாரிமுத்துவினால் கட்டுவித்தது. பின் கு. மூத்ததம்பியினால் பழுது பார்க்கப்பட்டது.

வடக்கு மதில் பழுதடைந்த பின் சின்னக்குட்டியாப்பிள்ளையினால் கட்டுவித்தது. மடம் சின்னக்குட்டியாரும், சுப்பிரமணியரும் ஊர் பொருளில் கட்டுவித்தது. தீர்த்த மண்டபம் முத்தையராலும் பிறர் பொருளிலும் கட்டுவித்துப் பின் சுவாமிநாத வன்னிபமும் பழுது பார்க்கப்பட்டது. வசந்த மண்டபம் கு. மூத்தம்பியார் கட்டுவித்தது. இந்தக் கோவிலிலே அதிகப்படியான திருப்பணிகள் பெரிய கடைத்தெரு, கரையூர், வில்லூன்றி, முதலியார் தெரு ஆகிய பற்பல இடங்களிலிருந்த புண்ணியவான்களினால் காலத்துக்கு காலம் செய்து வரப்பட்டது.

பின் 30.07.1925ஆம் ஆண்டு ஓர் கட்டுத்தேர் செய்வித்து வெள்ளோட்டம் செய்யப்பட்டது. 1939ஆம் ஆண்டு கதிரவேலுப்பிள்ளை (ஆசிரியர்) என்பவரால் ஓர் தேர் முட்டி கட்டுவிக்கப்பட்டது. பின் 1945ம் ஆண்டு கோணாமலை குமாரகுலசிங்கம் என்பவரால் நவக்கிரக கோயில் கட்டுவிக்கப்பட்டது. பின் இக்கோயிலில் இருந்த கட்டுத்தேர் சிதைந்தமையால் பொது மக்களின் பொருளுதவியில் ஓர் சித்திரத்தேர் திரு. இரா. சம்பந்தன் (பா.உ) தலைமையில் ஓர் திருப்பணிச்சபை உருவாக்கி 1982ம் ஆண்டு புரட்டாதி 15ம் திகதி செய்வித்து வெள்ளோட்டம் விடப்பட்டது. பின் அதற்கு ஓர் உறுதியான தேர் கொட்டகை 1983ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பராமரிப்பு பெற்றிருக்கும் சந்ததியர்களது முன்னோர்களால் செய்விக்கப்பட்டமை இவர்களுள் வேளாள பகுதியைச் சேர்ந்த கதிரவேலு முதலியார் தாமும் சிற்சில திருப்பணிகளைச் செய்வித்தது மாத்திரம் அல்லாமல் கோவில் பாவனைக்காக பெருந் தொகையான பொருளமைந்த ஆபரணங்களையும், கோவிற் செலவுக்காக மூன்று துண்டு நிலங்களையும் கொடுத்தார். இந்த திருப்பணிகளால் இவரும் கோவிற் பராமரிப்பாளர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்ள நேரிட்டது. இவர் காலந்தொட்டு அதாவது 1817ம் ஆண்டு முதல் இந்த கோவில் பாராமரிப்பு குறித்து இவரது பரம்பரையினர் உரித்துடையவர்கள் ஆனார்கள்.

1809ம் ஆண்டு கரையூரவர்களது பரம்பரை மாரிமுத்து பரம்பரையிலிருந்து வருகின்றது. 1809ம் சந்ததியினம் உரித்துடையவர்களான சாசனத்தின்படி அதில் ஒப்பமிட்ட நான்கு பூசைகள் அதன் மூலம் பெறும் வருமானங்கள் யாவற்றிற்கும் இக்கோவிலில் 1809ம் ஆண்டு கைச்சாத்திட்ட வைரவநாத குருக்கள் பின் வைத்திலிங்க குருக்கள், பின் அவர் மகன் இராமலிங்க குருக்கள், பின் சிவகர் குருக்கள் பின், சுரேனேனீஸ்வர சர்மாவும், அவர் மறைவிற்குப் பின் அவர்களின் மைந்தர்கள் சுதாகர குருக்கள், அவர் சகோதரர் சிவாகர குருக்களும் கோயில் பூசைக் காரியங்களை செய்கின்றார்கள். அவர் மகன் இரு மணியக்காரர்களில் ஒருவரான குருகுல வம்சத்தினரின் பரம்பரையில் கதிர்காம மணியம் (1763) என்பவரும், பின் சுவான் சம்மட்டியர் சவாரியப்பர் (1782) என்பவரும், அதன் பின் பெரியஆண்டார் (1795) என்பவரும், அதன் பின் க. ம. வேலப்பமணியமும், அதன் பின் ஸ்ரீகணபதிப்பிள்ளை (வேலப்பமணியத்தின் மகன்), அதன் பின் கந்தப்பர் மாரிமுத்து (கணபதிப்பிள்ளையின சகோதரர்), அதன் பின் மா. ம. கணபதிப்பிள்ளை (மாரிமுத்துவின் மகன்), அதன் பின் முத்து ஆனந்தரும் (கணபதிப்பிள்ளையின் மருமகன்), அதன் பின் ஆ. குமாரசுந்தரம் குஞ்சித்தம்பி வைத்தியர் (ஆனந்தரின் மகன்), அதன் பின் அவர் மகன் சண்முகம் சுப்பிரமணியம் அதன் பின் தற்போது அவர் மகன் ஞா.கதிர்காமதாசனும் மணியக்காரர்களில் ஒருவராக கடமையாற்றுகின்றார்கள்.

மற்ற மணியக்காரராகிய முதலியார் வம்சத்தில், முதலில் கதிர்வேல் முதலியார் (1809ம் ஆண்டு சாசனத்தில் ஒப்பமுற்ற ஒருவர்), அதன் பின் சுவாமிநாத முதலியாரும், அதன் பின் பொன்னையா முதலியாரும், அதன் பின், டி. நல்லதம்பி என்பவரும், அதன் பின் ம. ம. சுப்பிரமணியம் என்பவரும், அதன் பின் அவர் மகன் சு. அழகராஜா என்பவரும், அதன் பின் அவரது மருமகன் ரா. மயில்வாகனம் என்பவரும், பின் அ. சுப்பிரமணியம் (அழகராஜாவின் மகன்) என்பவரும், அதன் பின் அவர் இனத்தவராகிய ஆனந்தம் ஆசைப்பிள்ளை ஜெயரட்ணம் என்பவர் 1991ம் ஆண்டிலிருந்து நிர்வாக மணியக்காரராய் கடமையாற்றி உள்ளார்.

1991ம் ஆண்டிற்கு பின் கோவிலில் பற்பல முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வசந்த மண்டப வாயில் சிறு கோபுரம் கீர்த்திதாஸ் என்பவரால் கட்டுவிக்கப்பட்டது. மகா மண்டப அலங்கார வேலைகள் பொதுமக்கள் பணத்தில் செய்யப்பட்டது. நாராயணர் கோயில் கீர்த்திதாஸ் முன்னின்று கட்டுவித்தது. பின் முருக பக்தர்களின் நீண்டநாள் ஆசையாகிய பெருமானுக்கு ஓர் ராஜகோபுரம் அமைக்கும் முகமாக 2004ம் ஆண்டு ஓர் திருப்பணிச்சபை திரு. இரா. சம்பந்தன் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் பின் 2004ம் மார்கழியில் வந்த கடல் சூறாவளியினாலும் நாட்டின் போர்ச் சூழலாலும் இக் கைங்கரியம் நெடுநாளாக தடைப்பட்டது. பின் பெருமானின் திருவருளால் இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட கலியபெருமாள் விஜயன் என்ற சிற்பாசாரியினால் 2008ம் ஆண்டு ஆடி மாதம் 14ம் திகதி பெருமானுடைய இராஜ கோபுரத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

ராஜகோபுர வேலைகளுடன் தொடர்பாகப் பல திருப்பணி வேலைகளும் நடைபெற்றன. மடப்பள்ளி, யாகசாலை, வசந்தமண்டபம், தேர்முட்டி யாவன சிற்பக்கலை அம்சங்களுடன் புதுப்பிக்கப்பட்டன. மணிகோபுரம் புதிதாக அமைக்கப்பட்டது. இவை யாவும் பல கொடை வள்ளல்களாலும், பொதுமக்களின் அன்பளிப்பாலும் செய்விக்கப்பட்டது. 2011ம் ஆண்டு நவம்பர் 13ம் திகதி இராஜகோபுரத்திற்கும் எம்பெருமானுக்கும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நிறைவேறியது.