நிறுவனம்:திரு/ திருக்கோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருக்கோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் பன்குளம்

முகவரி=எல்லைக் காளி அம்மன் கோயில், பன்குளம், திருக்கோணமலை

முகவரி {{{முகவரி}}}
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருக்கோணமலை எல்லைக் காளி அம்மன் கோயில் திருக்கோணேஸ்வரத்தின் எல்லைகளை பாதுகாப்பதற்காக திருக்கோணமலை மாவட்டத்தின் எல்லைகள் தோறும் எட்டுத் திசைகளிலும் புகழ்பெற்ற எல்லைக் காளிகள் காவல் தெய்வங்களாக வீற்றிருந்து கருணை மழை பொழிகின்றனர். திருக்கோணமலையின் வடக்கு எல்லையின் பண்டைய ஸ்ரீபதிக் கிராமத்திலுள்ள காளி (தற்கோதைய பதவி ஸ்ரீபுர), பன்குளம், நல்லகுட்டியாற்றை அன்மித்த பறையன்குளத்தில் வீற்றிருக்கும் எல்லைக்காளி, முறையே சம்பூர் பதியுறை பத்திரகாளி, கட்டைபறிச்சான் அம்மச்சி அம்மன், ஈச்சிலம்பற்றுப் பிரதேசத்திலமைந்துள்ள இலங்கைத்துறை முகத்துவாரத்திலுள்ள செம்பொன்னாச்சி அம்மன், மூதூர் கடற்கரைச்சேனையிலிருந்து இடம்மாறி தம்பலகாமம் பகுதியிலுள்ள சம்மாந்துறை மாரியம்மன் ஆலயத்தில் தற்போது எழுந்தருளுகின்ற பத்திரகாளியம்மனும், கங்குவேலி நீலாப்பளையம்மன் ஆகியோர் திருக்கோணேஸ்வரத்தின் எல்லைகளை பாதுகாக்கும் பணியினை செய்கின்றனர்.

சோழ சாம்ராஜ்ஜியத்தின் அஸ்தமனத்துடன் ஈழவழ நாட்டில் சிங்கள ராஜதானிகளின் எழுச்சியுடன் இந்த கோயில்களின் வழிபாடுகளில் தடையேற்பட்டிருக்கலாம் அல்லது குடிப்பெயர்வுகளால் ஆதரிக்கும் அயலவர் இன்றி அம்பாள் மறைந்தருளியிருக்கலாம். எல்லைக் காளி நினைத்தால்தான் தோற்றம் வெளிக்கும். அதைத்தொடர்ந்த அன்னியராட்சியில் நிலவிய பிற மதங்களுக்கான கட்டுப்பாடு மதமாற்றங்களால் மறைந்தே அருள் புரிந்து வந்த எல்லைக் காளி சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியாரின் மூலம் கடந்த 1950களில் வெளிப்பட்டு மீண்டும் அம்பாள் அடியார்களின் கண்ணுக்கு விருந்தளித்து அருள்புரிய ஆரம்பித்துள்ளாள். சைவசித்தாந்த சிகாமணி, சைவப்புலவர் பண்டிதர் அமரர் இ. வடிவேல் ஐயா அவர்களது திருக்கோணமலை மாவட்ட திருத்தலங்கள் என்ற நூலில் பன்குளம் பறையன்குளம் எல்லைக் காளி அம்பாள் பற்றிய குறிப்பில் (பக்கம் - 91) சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியாருடன் கலந்துரையாடி பெறப்பட்ட தகவல்களைத் தந்துள்ளார்.

திருக்கோணமலை வவுனியா பாதையில் முதலிக்குளம், பன்குளம் சென்று வலது கைப்பக்கமாக உள்ளே நல்லகுட்டியாறுவரை (இன்றைய நாமல்வத்தை) சென்று நல்லகுட்டியாற்றில் இருந்து ஆரம்பமாகும் காட்டுப்பாதையில் சுமார் 7½ Km தூரம் வரை ஆழக்காட்டினுள் செல்ல வேண்டும். உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள் போக முடியும் என்றாலும் மழைகாலங்களில் பெருகும் காட்டாற்றாலும், சகதியினாலும் பயனம் கால் நடையாக திசை மாறும். இப் பயணத்தில் அடர்ந்த காடுகளும், “விக்ஸ்” மரக்காடுகளும் மனதை ஒருமுகப்படுத்தி ஏனைய சிந்தனை ஓட்டங்களை வெட்டி அறுத்து ஒரு ஆன்மீக பயணத்திற்கு உங்களை தயார் படுத்தும் இடத்தில் உள்ளாள்.

சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியார் அவர்களினால் ஆதரிக்கப்பட்ட அன்னையின் ஆலய பரிபாலனத்தை 1972ம் ஆண்டு தனது சுய விருப்பத்தின் பேரில் திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகச் செயலாளர் “சிவஞானச்செல்வர்” திரு. செல்லப்பா சிவபாதசுந்தரம் அவர்களிடம் கையளித்தார்.

1972ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை அருள்மிகு எல்லைக்காளி அம்பாளின் பரிபாலனத்தை திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் தமது சக்திக்கு எட்டிய வரை சிறப்பாக நடத்தி வருகின்றனர். எல்லைக்காளி அம்பாள் மீது பற்றுள்ளம் கொண்ட திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் 1982ம் ஆண்டளவில் சிற்பாசாஸ்திர முறைப்படி அம்பாளுக்கு ஆலயம் அமைக்க முற்பட்டு திருப்பணி வேலைகளை ஆரம்பித்தனர். திருக்கோணமலை சுங்கத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அமரர் கே. கே. சுப்பிரமணியம் அவர்களால் அம்பாளுக்குரிய புதிய ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டதுடன், காந்தீய அமைப்பின் ஆதரவுடன் ஆலயத்திற்கான கிணறும் கட்டப்பட்டு 45 தமிழ்க் குடும்பங்கள குடியேற்றப்பட்டு, அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான விவசாய முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பண்ணைக்கிணறுகள் இரண்டும் கட்டப்பட்டதுடன், ஆலய திருப்பணி வேலைகளும் சிறிது சிறிதாக மேலே எழும்பியது.

தைப்பூசத் தினத்தில் மகுடாகம முறைப்படி (கிராமிய முறைப்படி) விசேட வழிபாடுகள் நடத்தப்பட்டு பொங்கிப்படைத்து திருக்குளிர்த்தி வேள்விகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினால் ஒரு தைப்பபூசக் குழுவும் அமைக்கப்பட்டு பன்குளம் இந்து இளைஞர் மன்றமும் உருவாக்கப்பட்டு, தைப்பபூச பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வந்திருக்கின்றது. இதற்கான வளந்து, மடைப்பெட்டிகள் பன்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து எடுக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இதன்போது நடைபெற்ற ஓரு அற்புதத்தை திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபக செயலாளரும் தற்போதைய பிரதம ஆலோசகருமான “சிவஞானச் செல்வர்” திரு. செல்லப்பா சிவபாதசுந்தரம் அவர்கள் கூறியதை தருவது பொருத்தமுடையது கோயில் அமைப்பதற்காக காலம்காலமாக இருந்த இடத்திலிருந்து அம்பாளை தூக்குவதற்கு மனதில் தயக்கம் இருந்ததாகவும் கோணேஸ்வரா பதிப்பக உரிமையாளர் சண்முகரெத்தின சர்மா ஐயா அவர்களின் அறிவுரையின் பிரகாரம் ஒரு கன்றுக்குட்டியை நூலினால் அம்பாளின் திருவுருவத்துடன் இணைத்து கன்றுக்குட்டி அசைந்ததும் தூக்கினால் முடியும் என்ற அறிவுரையே அதுவாகும். ஆழக்காட்டில் உள்ள அம்பாளின் ஆலயத்திற்கு கன்றுக்குட்டியுடன் வந்த வாகனம் தடம்புரண்டது. ஏல்லோரும் துனுக்குற்றனர். எனினும் வண்டியை எதுவித சேதமுமின்றி ஓடக்கூடிய நிலையில் மீட்டெடுத்து பயணத்தை தொடரக்கூடியதாக இருந்ததாகவும் அம்பாளின் மீது பாரத்தை போட்டு வணங்கி மேற்சொன்னபடி கன்றுக்குட்டி அசைந்நதும் அம்பாளின் திருவுருவத்தை தூக்கி தற்போது உள்ள இடத்தில் பாலஸ்தாபனம் பண்ணியதாகவும் கூறினார். பூரணமற்ற மும்மலங்கள் பொருந்திய மனிதரின் வலிமையைவிட அன்புள்ள ஒரு கன்றுக்குட்டியின் எளிமையான உடல் அசைவிற்கும், ஒரு நூலுக்கும் அம்பாள் அடிபணிந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டாள்.

1983ம் ஆண்டு ஆடி மாதம் ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத ஆண்டு. அதனையும் அதனைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளும் தமிழரை பொசுக்கின. அவர்தம் நாகரீகம், பண்பாடு, கல்வி, பொருளாதாரம் போன்றவை சிதைந்தன. கட்டிய குறைக்கோயிலும் சிதைந்தது அடர்வனத்தில் தவமிருப்பதைப்போலும் எல்லைக் காளியும் மோனத்தவத்தில் மூழ்கினாள்.

ஏறத்தாள 28 ஆண்டுகளுக்குப் பின்பு மூலநாதரான திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு மீண்டும் குடமுழுக்குக் கண்டு நித்திய பூசைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னரே எல்லைக்காளியும் தவம் கலைந்து தம்மை வெளிப்படுத்த திருவுளம் கொண்டாள். அன்று சைவப்பெரியார் சாண்டோ முத்தையா சாமியார் காடு முழுவதும் தேடியலைந்ததைப் போல 2010ம் ஆண்டு திருக்கோணமலை மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் நல்லகுட்டியாற்று முஸ்லீம் அன்பர்களின் உதவியுடன் பறையன்குளக் காடுகளினுள் தேடி பாதை வெட்டி எல்லைக்காளி அம்பாளின் திருவுருவைக் கண்டு ஆனந்தமடைந்தனர்.

எல்லைக்காளியின் ஆலயத்திற்கு செல்லும் பாதையையும், ஆலய சுற்றாடல் பகுதியையும் முதலிக்குளம் பன்குளம் பகுதிவாழ் அனைத்து அன்பர்களின் ஒத்துழைப்புடன் சிரமதானம் மூலம் துப்பரவு செய்து ஆலய கிணற்றையும் இறைத்து மீண்டும் 2010ம் ஆண்டிலிருந்து தைப்பபூசத்தன்று எல்லைக்காளிக்கு விசேட பூசை அபிசேகங்கள் நடத்தப்பெற்று தொடர்ந்து பேரவையின் திட்டப்படி பிரதி மாத நோன்மதி தினங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன. இப்பூசைகள் மாவட்டத்தின் கட்டுக்குளப்பற்று, தம்பலகாமப்பற்று, கொட்டியாரப்பற்று மற்றும் பன்குளம் பகுதியின் சகல கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்போது புதிய முகங்கள், புதிய பக்தர்கள் அயல் கிராமங்களில் உள்ள பௌத்தர்கள், இஸ்லாமியர்கள் என எல்லாச் சமூகத்தவர்களும் எல்லைக்காளியை ஆராதிக்கின்றனர். அம்பாளின் ஆட்சியில் வேற்றுமையை மறந்து வழிபடுகின்றனர்.