ஆளுமை:சுந்தரம்பிள்ளை, செல்லர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரம்பிள்ளை
தந்தை செல்லர்
தாய் தங்கம்
பிறப்பு 1938.05.20
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரம்பிள்ளை, செல்லர் (1938.05.20 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லர்; தாய் தங்கம். இவர் காரை சுந்தரம்பிள்ளை எனவும் பலராலும் அறியப்பட்டார். இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் உயர்நிலைக் கல்வியை சுழிபுரம் விக்டோரியா கல்லூரியிலும் பயின்றார். பின்னர் கொழும்பு அக்குவெனெஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் கலைமாணி, கல்வித்துறையில் முதுமாணிப் பட்டத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தையும் பெற்றார்.

1960 ஆம் ஆண்டில் இருந்து கொழும்பு சென் யோசேப் கல்லூரி, கேகாலை ஹெம்மாதகம முஸ்லிம் மகா வித்தியாலயம், கேகாலை மாவனல்ல சாகிரா கல்லூரி, யாழ்ப்பாணம் தேவரையாளி இந்துக் கல்லூரி, ஒஸ்மானியாக் கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும் காரைநகர் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பின்னர், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், தலவாக்கெலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை, கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆகியவற்றில் அதிபராகவும் இவர் பணியாற்றினார். மேலும் திறந்த பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணக் கல்லூரி ஆகியவற்றில் வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

இவரது முதலாவது "புகைவண்டி" என்ற கவிதை அழ. பூஞ்சோலை இதழில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து தேனாறு, சங்கிலியம், தவம், உறவும் துறவும், பாதை மாறியபோது, காவேரி ஆகிய கவிதை நூல்களையும் ஈழத்து இசை நாடக வரலாறு, இந்து நாகரிகத்திற்கலை, நடிகமணி வி. வி. வைரமுத்துவின் வாழ்வும் அரங்கும், சிங்கள பாரம்பரிய அரங்கம், வட இலங்கை நாட்டார் அரங்கு, ஈழத்து மலையகக் கூத்துக்கள் ஆகிய ஆய்வு நூல்களையும் பூதத்தம்பி நாடகம், விவேக சிந்தாமணி ஆகிய நாடக நூல்களையும் எழுதியுள்ளதோடு நாடக தீபம் என்ற நூலை தொகுத்தும் உளவியல், கல்வியியல், புள்ளிவிபரவியல் ஆகிய நூல்களை பதிப்பித்துமுள்ளார்.

இவர்பதுளை பாரதி கல்லூரி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசும் தங்கப் பதக்கமும் யாழ் மாநகரசபை நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, அகில இலங்கைத் தமிழரசுக் கட்சி நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, 'சுதந்திரன்' நடத்திய கவிதைப் போட்டியில் முதற்பரிசு, தமிழ் காங்கிரஸ் நடத்திய கவிதைப் போட்டியில் சிறப்புப் பரிசு, யாழ் மாநகர சபை 1982 இல் நடத்திய மன்ற கீதத்திற்கான போட்டியில் முதற்பரிசும் விருதும் ஈழநாடு தினசரி பத்திரிகை 1970 இல் நடத்திய அகில இலங்கைக் காவியப் போட்டியில் 'சங்கிலியம்' முதற்பரிசு, யாழ் பல்கலைக்கழகக் கலாநிதிப் பட்டத்திற்கு 1990 இல் சமர்ப்பித்த ஆய்வேட்டிற்கு சிறந்த ஆய்வுக்கான தம்பிமுத்து கனகசுந்தரம்பிள்ளை நினைவு விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 97-99