ஆளுமை:அலி, ஏ. எம். எம்.

From நூலகம்
Name அலி
Pages அப்துல் மஜீது
Pages -
Birth 1948.11.13
Pages 2020.11.26
Place கிண்ணியா, திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் கிண்ணியாவை சேர்ந்த புகழ்பூத்த கவிஞர் ஆவார். கிண்ணியா அடப்பனார் வயலைச் சேர்ந்த அப்துல் மஜீது தம்பதியினருக்கு அப்துல் மஜீது முகம்மது அலி 1948.10.13 இல் பிறந்தவர்.

இவர் முள்ளிப்பொத்தானை அ. மு. க. பாடசாலை (தற்போதைய முள்ளிப்பொத்தானை மத்திய கல்லூரி), கிண்ணியா மத்திய கல்லூரி, காத்தான்குடி மத்திய கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இலங்கை கனிப்பொருள் மணற்கூட்டுத்தாபனத்தின் நேரப்பதிவாளர் மற்றும் மேற்பார்வையாளர், இலங்கை விமானப் படையின் சுயேட்சை வான்படை வீரர், டெலிக் ஆங்கில ஆசிரியர், துறைமுக அதிகார சபை நானாவித உதவியாளர் மற்றும் சிங்கள – தமிழ் மொழி பெயர்ப்பாளர் எனப் பல்வேறு அரச பதவிகள் வகித்து ஓய்வு பெற்றவர்.

1974ஆம் ஆண்டு மரபுக்கவிதை மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தார். 'ஒரு விவசாயியின் குரல்' என்ற தலைப்பில் இவரது முதல் கவிதை தினகரன் பத்திரிகையில் வெளியானது. கட்டுரை மற்றும் சிறுகதைகளும் எழுதி வருகின்றார். கிண்ணியா அலி, துமு துரைமகன் என்பன இவரது புனைபெயர்கள். இவரது கவிதைகளுக்கு பெருமளவு களமமைத்துக் கொடுத்த பத்திரிகை சிந்தாமணியாகும். வீரகேசரி, தினகரன், போன்ற பத்திரிகைகளிலும் சிரித்திரன், நாளை நமதே போன்ற சஞ்சிகைகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

இதனைவிட இலங்கை வானொலியின் பாவளம், ஒலிமஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளில் இவரது கவிதைகள் பல ஒலிபரப்பாகியுள்ளன. சமகாலத்திலும் இவர் கவிதைகள் எழுதி வருகின்றார். இவரது முகநூல் பக்கத்தில் தரமான கவிதைகளை அடிக்கடி வாசிக்க முடியும்.

தற்காலத்தில் உள்ள இளங்கவிஞர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை அவ்வப்போது வழங்கி வருபவர் இவர். இதனால் இளங் கவிஞர்கள் இவரை 'கவி வாப்பா' என்று அழைக்கின்றனர். கவியரங்குகள், இலக்கிய நிகழ்வுகள் என்பவற்றில் கலந்து கொண்டு கவிமழை பொழிந்து வருகின்றார். சிரேஷ்ட பிரசைகள் சங்கம், கிண்ணியா பிரதேச கலை இலக்கிய மன்றங்கள் என்பவற்றில் இணைந்து பங்காற்றியுள்ளார்.

500 க்கும் மேற்பட்ட இவரது கவிதைகள் இதுவரை வெளிவந்துள்ளன. இலங்கை, இந்தியப் பத்திரிகைகளில் இவை வெளிவந்துள்ளன. பெரும்பாலும் இவை மரபுக்கவிதைகள். 'குடையும் அடைமழையும்', 'ஒரு திராட்சைக்கொடி தேம்பி அழுகின்றது' என்பன இவரது கவிதை தொகுப்புகளாகும். இவரது சில சிறுகதைகள் 'யாவும் கற்பனை' என்று சொல்லக் கூடியவையல்ல. அவை யதார்த்தங்களை சொல்வதாக உள்ளன. இலக்கியம் என்பது காலக் கண்ணாடி என்று சொல்லப்படுவதை உறுதிப்படுத்துவனவாக உள்ளன. 'ஒரு தென்னைமரம்' என்பது இவரது சிறுகதைத் தொகுதியாகும்.

'இப்ராஹீமின் இலட்சியக் கனவுகள்' என்பது கட்டுரைகள் அடங்கிய ஒரு நூலாகும். இதன் தொகுப்பாசிரியர் இவர். முன்னாள் இராஜதந்திரி ஏ.ஸீ.எம்.இப்ராஹீம் அவர்களது வரலாற்றைக் கூறும் நூல் இது. பிரதேச, மாவட்ட, தேசிய, மற்றும் சர்வதேச கவிதைப் போட்டிகளில் இவர் பங்குபற்றியுள்ளார். இதுவரை 14 போட்டிகளில் பங்குபற்றி பரிசு பெற்றுள்ளார்.

2002 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் 2008 இல் 'கலாபூஷணம்' விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா பிரதேச செயலக 2008ஆம் ஆண்டு சாகித்திய விழாவில் 'கவித்தாரகை' பட்டமும், விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 2012 இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முதலமைச்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2014 இல் காத்தான்குடி நவ இலக்கிய மன்றம் நடத்திய கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றதால் பரிசும் 'இலக்கியவாரிதி' என்ற பட்டமும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 103-105
  • நூலக எண்: 1031 பக்கங்கள் 08