நிறுவனம்:மட்/ மண்டூர் கந்தசுவாமி கோயில்
பெயர் | மட்/ மண்டூர் கந்தசுவாமி கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | மட்டக்களப்பு |
ஊர் | மண்டூர் |
முகவரி | மண்டூர், மட்டக்களப்பு |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
மண்டூர் கந்தசுவாமி கோயில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரின் தெற்கே சுமார் 20 மைல்கள் தூரத்தில் மண்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மை வாய்ந்த முருகன் கோவில். இது தில்லை மண்டூர் அல்லது சின்னக் கதிர்காமம் என்றும் சிறப்பாக அழைக்கப்படுகின்றது.
கதிர்காமம், மற்றும் மண்டூர் ஆலயங்கள் கந்தன் படையெடுப்புடன் சம்பந்தப்பட்டவை என்று கொள்ளப்படுகின்றன. கந்தன் படையெடுப்பு இராமாயணப் போருக்கு முற்பட்டது எனவும் (கி.மு. 1800 இற்கு முற்பட்டது) எனவும் கொள்ளப்படுகின்றது. சூரபத்மனை சங்காரம் செய்த வேலானது உக்கிரம் தாங்க முடியாமல் கடலில் மூழ்கி மூன்று கிளையானது என்றும் அதில் ஒரு கிளையே மண்டூரில் தில்லை மரத்தில் பதிந்து திருத்தலமானது என்றும் மட்டக்களப்பு தமிழகம், மட்டக்களப்பு மான்மியம் ஆகிய நூல்கள் கூறுகின்றன.
இக்கோவில் 1215-1248 காலப்பகுதியில் கட்டப்பட்டது. கோவில் அமைப்பு கதிர்காமம் போன்று அமைந்துள்ளது. வெளி முற்றத்தில் இரண்டு சிறிய கோயில்கள் உள்ளன. ஒன்று தெய்வயானைக்கும் மற்றையது வள்ளிக்கும் ஆகும். பிள்ளையார், மற்றும் நாகதம்பிரானுக்கும் கோயில்கள் உள்ளன. இங்குள்ள வழிபாட்டு முறைகள் பண்டைய மற்றும் கதிர்காமத்தை ஒத்து உள்ளன. தீர்த்தத்தின் போது புட்பக விமானம் ஆலயத்திலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு வாவிக் கரையில் உள்ள சபா மண்டபத்தை சென்றடையும். கப்புகனார் அதனுள் இருக்கும் பொருளை மட்டக்களப்பு வாவியில் சீலையால் மறைக்கப்பட்டிருக்கும் பந்தருள் எடுத்துச் சென்று தீர்த்தம் ஆடுவார்.
மண்டூரில் பண்டைய காலத்தில் கதிர்காமம் போன்று தீ மிதிப்பும் இடம்பெற்றுள்ளதாக முதலியார் எஸ். ஓ. கனகரெத்தினம் மட்டக்களப்பு பற்றி ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிழாவை ஆரம்பிப்பதற்கான முதல் நிகழ்வாக மாலையில் வீதியுலா வரும் பாதைகளில் சாட்டையடி வீரர்கள் சாட்டை அடிப்பார். வெளிச்சம் இல்லாத காலத்தில் காட்டினுள் ஆலயம் இருந்தபோது அருகிலுள்ள மிருகங்களை கலைப்பதற்காக சாட்டை அடிக்கப்பட்டது. திருவிழாவின் போது மாலையில் ஆலயத்தைச் சுற்றி சங்கு ஊதி, சேகண்டி அடிப்பது வழக்கமாகும். கம்பிகளில் சீலையைச் சுற்றி தேங்காய் எண்ணெயில் நனைத்து இங்கு இன்றும் ஒளியூட்டப்படுகின்றது.